March 01 2018 0Comment

சிவயோகிநாதர் கோவில்:

சிவயோகிநாதர் கோவில்:

பொதுவாக ஆலயங்களில் ஒரே ஒரு தல விருட்சம்தான் இருக்கும். ஒரு சில கோவில்களில் அபூர்வமாக இரண்டு அல்லது மூன்று கூட இருக்கும். ஆனால் கும்பகோணம் அருகில் உள்ள #திருவிசநல்லூர் சிவயோகநாதர் திருக்கோவிலில், #8 தல விருட்ச மரங்கள் இருக்கும் #அதிசயத்தைக் காணலாம்.

வன்னி, உந்து வில்வம், புன்னை, மகிழம், ஆல், அரசு, நெல்லி, பரசு வில்வம் என இங்கு எட்டு தலவிருட்சங்கள் இருக்கின்றன. மேலும் இந்த ஆலயத்திற்குள் நுழையும் போது, நந்திதான் முதலில் உள்ளது.

அதன்பிறகே கொடிமரம் இருக்கிறது. கருவறையில் இருக்கும் சிவலிங்கத் திருமேனியின் மேல் பகுதியில் #ஏழு சடைகள் காணப்படுகின்றன.

திருவிசநல்லூர் கோவிலில் அமைந்துள்ள சூரிய ஒளி கடிகாரம் இரண்டாம் பராந்தகன் என்னும் சுந்தர #சோழன் காலத்தில் மதிற்சுவரில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கடிகாரம் தமிழர்களுக்கு வானியல் துறையில் உள்ள ஆழ்ந்த புலமையும், துல்லியமாக நேரம் கண்டறியும் திறனும் மேலோங்கி இருந்ததற்கான எடுத்துக்காட்டாகும்.

தஞ்சாவூர் மாவட்டம், #திருவிடைமருதூர் வட்டம், திருவிசநல்லூர்

பிற்காலச் சோழர்களோடு தொடர்புடைய, வரலாற்று சிறப்புமிக்க கிராமம். வேம்பற்றூர் (வேப்பத்தூர்) என்றும் சோழமார்த்தாண்ட சதுர்வேதிமங்கலம் என்றும் இந்த ஊர் அழைக்கப்பட்டது.

இக்கோவில் செங்கல் கட்டுமானத்திலிருந்து முழு கற்றளியாக மாற்றப்பட்டுள்ளது. கோவில் மற்றும் பரிவார சன்னதிகள் முதலாம் இராஜேந்திர சோழனால் (1012-1044A.D.) விரிவுபடுத்தப் பட்டுள்ளன.

இறைவன் இறைவி:

இறைவன் #யோகநாதீஸ்வரர் என்ற சிவயோகிநாதர். இவரை புராதானேஸ்வரர், வில்வாரண்யேசுவரர் என்றும் அழைப்பதுண்டு. அம்பிகை சவுந்திரநாயகி என்ற சாந்தநாயகி   எழுந்தருளியுள்ளார்.

மூலவர் கிழக்கு நோக்கிய சன்னதியில் சுயம்புலிங்கமாக எழுந்தருளியுள்ளார். சித்திரை மாதம் 1-3 மூன்று தேதிகளில் சூரியக் கதிர் சிவலிங்கத்தின் மேல் படிவது இக்கோவிலின் சிறப்பு. தலவிருட்சம் அரசமரம். ஜடாயு தீர்த்தம்.

#புராணம்:

படைப்புக் கடவுளான பிரம்மன், விஷ்ணு சர்மாவின் மகனாக, இவ்வூரில் அவதரித்தார். தன்னுடன் பிறந்த ஆறு யோகிகளுடன் இயைந்து சிவனை வேண்டி தவமியற்றினார். தவம் கண்டு மனமிரங்கி நேரில் தோன்றிய சிவன் இந்த ஏழு யோகிகளை ஏழு ஜோதி வடிவங்களாக்கி தன்னுள்ளே ஐக்கியப்படுத்திக்கொண்ட நாள் சிவராத்திரியாகும். எனவே இங்கு சிவனுக்கு சிவயோகிநாதர் என்று பெயர்.

சோழர் கால #சூரியஒளி_கடிகாரம்:

கோவிலின் தென்புறம் அமைந்துள்ள மதிற்சுவருக்கு அருகில், அம்மன் சன்னதிக்கு எதிரில், சுமார் 1000 ஆண்டுகள் பழைமையான சூரியஒளி கடிகாரம் அமைந்துள்ளது.

இரண்டாம் பராந்தக சோழன் என அழைக்கப்படும் சுந்தர சோழன் (957–973 AD) காலத்தில் அமைப்பட்டதாகக் கருதப்படும் இச்சுவர்க் கடிகாரம் சூரிய ஒளி முள்ளின் மீது ஏற்படுத்தும் நிழலின் அடிப்படையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது இயங்க பேட்டரி தேவையில்லை. சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை சூரியனின் இயக்க அடிப்படையில் கணக்கிட்டு இக்கடிகாரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கிரானைட் கல்லில் அரைக்கோள வடிவில் டயல் பேட் (dial pad) செதுக்கப்பட்டுள்ளது.

நடுவில் மூன்று இன்ச் நீளத்தில் பித்தளையால் செய்யப்பட்ட முள் (ஆணி) செங்குத்தாக (vertical) நிரந்தரமாகப் பொருத்தப்பட்டுள்ளது. சூரியனின் நிழல் இந்த ஆணியில் பட்டு நிழல் எந்த புள்ளியில் விழுகிறதோ அதுவே அப்போதைய நேரம்.

கோவிலுக்கு வந்த பக்தர்கள், சூரியஒளி ஆணியில் பட்டு டயல் பேடில் நிழல் விழும் புள்ளியை கண்டு இந்த நேரம் என்று கணக்கிடுவதுண்டாம்.

பத்தாம் நூற்றாண்டில் (957–973 AD) எழுப்பப்பட்ட கோவிலில், இந்த சூரிய ஒளி கடிகாரம், சூரிய ஒளி உள்ளவரை நேரம் காட்டும். சூரியன் மறைவுக்குப் பிறகு இதனைப் பயன்படுத்தவியலாது. பித்தளை முள் சூரிய ஒளியால் வெளுத்துப் போனதால் #கிரானைட் கல்லுக்கும் முள்ளுக்கும் நிறத்தில் வேறுபாடு காணமுடியவில்லை.

இன்று நாம் காணும் எண்கள் ஆங்கிலேயரால் அவர்கள் வசதிப்படி கிரானைட் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளன.

திருவிசலூர் செல்ல…

அருகிலுள்ள பெரிய இரயில் நிலையம்  #கும்பகோணம். கும்பகோணத்திலிருந்து இவ்வூர் சாலைகளோடு இணைக்கப்பட்டுள்ளது. பஸ் மற்றும் டாக்சி வசதி உண்டு.

Share this:

Write a Reply or Comment

12 + 14 =