January 20 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் ஸ்ரீரங்கம்

  1. அருள்மிகு ரங்கநாத பெருமாள் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     ரங்கநாதர்

உற்சவர்        :     நம்பெருமாள்

தாயார்          :     ரங்கநாயகி

தல விருட்சம்   :     புன்னை

தீர்த்தம்         :     சந்திர தீர்த்தம் மற்றும் 8 தீர்த்தங்கள்

புராண பெயர்    :     திருவரங்கம்

ஊர்            :     ஸ்ரீரங்கம்

மாவட்டம்       :     திருச்சி

 

ஸ்தல வரலாறு:

திருப்பாற்கடலில் இருந்து தோன்றிய ரங்கநாதரை, நெடுங்காலமாக பிரம்மதேவர் பூஜித்து வந்தார். ரங்கநாதருக்கு நித்திய பூஜைகள் செய்ய, சூரியன் நியமிக்கப்பட்டார். சூரிய குலத்தில் தோன்றிய ராமபிரானும், அயோத்தியில் இருந்த ரங்கநாதரை வழிபட்டு வந்தார். ஸ்ரீராம பட்டாபிஷேகத்துக்கு வருகை புரிந்த விபீஷணனுக்கு, ராமபிரான், தான் பூஜித்து வந்த ரங்கநாதர் சிலையை பரிசாக அளித்தார். விபீஷணன், இலங்கை திரும்பும் வழியில், சற்று நேரம் ஓய்வெடுக்க எண்ணினார். ரங்கநாதர் சிலையை கீழே வைக்க விரும்பாத விபீஷணன், காவிரி ஆற்றங்கரையில் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் சிறுவனிடம் அச்சிலையைக் கொடுத்து, எக்காரணம் கொண்டும் கீழே வைக்கக் கூடாது என்று கூறிவிட்டு, சற்று நேரம் ஓய்வெடுத்தார். ஆனால் அச்சிறுவன், ரங்கநாதர் சிலையைக் கீழே வைத்துவிட்டான். சிறிது நேரம் இளைப்பாறிவிட்டு வந்த விபீஷணன், சிறுவனைக் கடிந்து கொண்டார். தரையில் இருந்து மீண்டும் ரங்கநாதர் சிலையை எடுக்க இயலவில்லை. கலங்கிய மனநிலையில் இருந்த விபீஷணனுக்கு, அப்பகுதியை ஆட்சி புரிந்த மன்னர் தர்மவர்மன் ஆறுதல் கூறினார்.

ரங்கநாதருக்கு காவிரிக் கரையிலேயே தங்கியிருக்க வேண்டும் என்று விருப்பம். அதனால் குடதிசை முடியை வைத்து, குணதிசை பாதம் நீட்டி, வடதிசை பின்பு காட்டி, விபீஷணன் இருக்கும் தென் திசை இலங்கை நோக்கி பள்ளிகொண்டு அருள்வதாக உறுதியளித்தார். சிறுவனாக வந்தது விநாயகப் பெருமான் என்று கூறப்படுகிறது. அவரே மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் என்று அழைக்கப்படுகிறார். ரங்கநாதரின் விருப்பத்துக்கு ஏற்ப தர்மவர்மனும், இவ்விடத்தில் கோயில் கட்டி வழிபட்டார். காலப்போக்கில் இக்கோயில் வெள்ளப்பெருக்கில் மண்ணில் மறைந்து போனதாக கூறப்படுகிறது. மன்னர் தர்மசோழர் மரபில் வந்த கிள்ளிவளவன், இக்கோயிலை மீண்டும் அமைத்து வழிபட்டதாக வரலாறு கூறுகிறது.

 

கோயில் சிறப்புகள்:

  • 108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலமாகப் போற்றப்படும் திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயில், பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுகிறது.

 

  • காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளால் சூழப்பட்ட தீவில், 7 சுற்று மதில்களுடன் இக்கோயில் அமைந்துள்ளது.

 

  • பஞ்சரங்கத் தலங்களுள் (ஸ்ரீரங்கநாதசுவாமி கோயில், ஸ்ரீரங்கப்பட்டணம், ஸ்ரீரங்கநாதர் கோயில், ஸ்ரீரங்கம், சாரங்கபாணி கோயில், குடந்தை, அப்பால ரங்கநாதர், கோவிலடி, பரிமள ரங்கநாதர் கோயில், மயிலாடுதுறை) ஒன்றாக இத்தலம் போற்றப்படுகிறது.

 

  • 12 ஆழ்வார்களில் மதுரகவியாழ்வார் தவிர ஏனையோரால் இத்தலம் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது.

 

  • கம்பராமாயணத்தை கம்பர் இத்தலத்தில் அரங்கேற்றம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

  • கம்பராமாயணத்தை கம்பர் இங்கு அரங்கேற்றம் செய்தபோது, அதில் நரசிம்மரை பற்றி குறிப்பிட்டதை சுட்டிக்காட்டிய அறிஞர்கள், ராமாவதாரத்தில் நரசிம்மர் பற்றி சொல்லக்கூடாது என்றனர். கம்பர், “அதை நரசிம்மரே சொல்லட்டும்!’ எனச்சொல்லி நரசிம்மரிடம் வேண்டினார். அப்போது நரசிம்மர், கர்ஜனையுடன் தூணிலிருந்து வெளிப்பட்டு, “கம்பரின் கூற்று உண்மை!’ என ஆமோதித்து தலையாட்டினார்.மேட்டழகிய சிங்கர் என்றழைக்கப்படும் இவர், தாயார் சன்னதி அருகில் தனிசன்னதியில் இருக்கிறார். கையில் சங்கு மட்டும் இருக்கிறது, கரம் கிடையாது. சன்னதி எதிரில், கம்பராமாயண அரங்கேற்ற மண்டபம் உள்ளது.

 

  • விஷ்ணு பெருமாள் தனது பக்தர்களுக்கு ஆதிசேஷ வடிவில்‌ சுருண்ட பாம்பின் மீது படுத்துக்கொண்டு ரங்கநாதராக காட்சி தருகிறார். இந்த விஷ்ணு சிலையின் தனிச்சிறப்பு என்னவென்றால், வழக்கமாக பிரம்மாவின் தொப்புளில் இருந்து எழும் தாமரை காணவில்லை. ஒவ்வொரு நாளும் சூரிய உதயத்திற்கு முன்னதாகவே பிரம்மா விஷ்ணுவை வணங்கி வருவதாக நம்பப்படுகிறது. விஷ்ணு பெருமாள் பரலோகத்தில் இருந்துகொண்டு அண்டத்தில் உள்ள அனைத்தையும் பாதுகாக்கின்றார். ரங்கநாத சுவாமி – “பெரியபெருமாள், நம் பெருமாள், அழகிய மணவாளன்“ என்ற பெயர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார்.

 

  • ஸ்ரீரங்கத்தில் துணை கோயில்களாக விஷ்வக்சேனா, ராமர், கிருஷ்ணர், நாச்சியார், சக்கரத்தாழ்வார், கருடன், அனுமான், ஆண்டாள், 12 ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள் மற்றும் வேதாந்த தேசிகர்கள் அருள்புரிகின்றனர்.

 

  • பொன்னால் வேயப்பட்ட ஸ்ரீரங்க விமானம், ‘ஓம்’என்ற பிரணவ வடிவில் சுயம்புவாக எழுந்தருளியுள்ளது. இதற்கு 24 கி.மீ தொலைவு சுற்றி எங்கிருந்து வழிபட்டாலும் இறைவனின் திருவடியை அடையக் கூடிய முக்தி நிச்சயம் என்று ஸ்ரீரங்க தலவரலாறு உரைக்கிறது. ரங்கவிலாஸ் மண்டபத்தில் உள்ள கல் கொடிமரத்தை வணங்கி, உயர்ந்து நோக்கினால், கொடிமரம் அசைவது போன்று தோன்றும்.

 

  • தனது 120-வது வயதில் (கிபி 1137) சாயுஜ்யம் அடைந்தார் ஸ்ரீராமானுஜர். இத்தனை ஆண்டுகள் கடந்தும் இக்கோயிலில் பதப்படுத்தப்பட்ட நிலையில் இவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.

 

  • ரங்கநாதர் அணிந்து கொண்டிருக்கும் காலணிகள் கொஞ்சம், கொஞ்சமாகத் தேய்வதாக கூறப்படுகிறது. 6 மாதங்களுக்கு ஒருமுறை ரங்கநாதரின் திருப்பாதத்தில் இருந்து காலணிகள் கழற்றப்படும்போது, அவரே பயன்படுத்தப்பட்டவை போல தேய்ந்து காணப்படும்.

 

  • ரங்கநாச்சியார் சந்நிதிக்கு வெளியில் அமைந்துள்ள ஐந்து குழி மூன்று வாசல் குறிப்பிடத்தக்கது. அர்த்த பஞ்சக ஞானத்தை ஐந்து குழி குறிப்பதாகவும், மூன்று வாசல் பிரம்மத்தின் வழி என்றும் கூறப்படுகிறது. ஐந்து குழிகள் வழியே ஐந்து விரல்களை வைத்து தென்திசை நோக்கினால் பரமபத வாசல் தெரியும் என்பதால் இவ்விதம், தாயார் பெருமாளை சேவிக்கிறார் என்பது ஐதீகம்.

 

  • இக்கோயில் சந்திர புஷ்கரணி, வில்வ தீர்த்தம், சம்பு தீர்த்தம், பகுள தீர்த்தம், பலாச தீர்த்தம், அசுவ தீர்த்தம், ஆம்ர தீர்த்தம், கதம்ப தீர்த்தம், புன்னாக தீர்த்தம் ஆகிய 9 தீர்த்தங்களைக் கொண்டுள்ளது.

 

  • ரங்கநாதர் கோயில் உள்ள ஏழு மதில் சுற்றுகள் ஏழு உலகங்களாக கருதப்படுகின்றன. மாடங்கள் சூழ்ந்த திருச்சுற்று – பூலோகம், திருவிக்கிரம சோழன் திருச்சுற்று – புவர்லோகம், அகலங்கனென்னும் கிளிச்சோழன் திருச்சுற்று – சுபர்லோகம், திருமங்கை மன்னன் திருச்சுற்று – மஹர்கோகம், குலசேகரன் திருச்சுற்று – ஜநோலோகம், ராஜமகேந்திர சோழன் திருச்சுற்று – தபோலோகம், தர்மவர்ம சோழன் திருச்சுற்று – சத்யலோகம் என்று கருதப்படுகின்றன.

 

  • பெரிய கோயில், பெரிய பெருமாள், பெரிய பிராட்டியார், பெரிய கருடன், பெரியவசரம் (நைவேத்தியம்), பெரிய திருமதில், பெரிய கோபுரம் என்ற பெருமைகளைக் கொண்டதாக இக்கோயில் அமைந்துள்ளது.

 

  • ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு ஸ்ரீதேவி, பூதேவி, துலுக்க நாச்சியார், சேரகுலவல்லி நாச்சியார், கமலவல்லி நாச்சியார், கோதை நாச்சியார், ரங்கநாச்சியார் என்று 7 நாச்சியார் உள்ளனர்.

 

  • ஸ்ரீரங்கம் கோயிலில் வருடத்துக்கு 7 முறை (விருப்பன் திருநாள், வசந்த உற்சவம், விஜயதசமி, வேடுபறி, பூபதி திருநாள் – அயோத்தியில் ராமர் கொண்டாடிய விழா, பாரிவேட்டை, ஆதி பிரம்மோற்சவம்) நம்பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருள்வார். வருடத்துக்கு 7 முறை (சித்திரை, வைகாசி, ஆடி, புரட்டாசி, தை, மாசி, பங்குனி) நம்பெருமாள் கோயிலை விட்டு வெளியே எழுந்தருள்வார். ஏழு உற்சவத்தின்போது, 7-ம் நாள் (வருடத்துக்கு 7 முறை – சித்திரை, வைகாசி, ஆவணி, ஐப்பசி, தை, மாசி, பங்குனி) நெல்லளவு கண்டருள்வார்.

 

  • தாயார் சந்நிதியில் வருடத்துக்கு 7 உற்சவங்கள் (கோடை உற்சவம், வசந்த உற்சவம், ஜேஷ்டாபிஷேகம், திருப்பாவாடை, நவராத்திரி, ஊஞ்சல் உற்சவம், அத்யயநோற்சவம், பங்குனி உற்சவம்) நடைபெறும்.

 

  • நவராத்திரி உற்சவத்தின் 7-ம் திருநாளில் ஸ்ரீரங்க நாச்சியார் திருவடி சேவை நடைபெறும். தமிழ் மாதங்களில் 7-ம் மாதமான ஐப்பசி 30 நாட்களும் தங்க குடத்தில் புனிதநீர் யானை மீது கொண்டு வரப்படும். திருமாலின் 7-ம் அவதாரமான ராமாவதாரம் பூஜித்த தலம் ஸ்ரீரங்கம் கோயில்.

 

  • பன்னிரெண்டு ஆழ்வார்களும் 7 சந்நிதிகளில் எழுந்தருளியுள்ளனர். முதல் சந்நிதியில் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், இரண்டாம் சந்நிதியில் நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், மதுரகவியாழ்வார், மூன்றாம் சந்நிதியில் குலசேகர ஆழ்வார், நான்காம் சந்நிதியில் திருப்பாணாழ்வார், ஐந்தாம் சந்நிதியில் தொண்டரடிப்பொடி ஆழ்வார், ஆறாம் சந்நிதியில் திருமழிசை ஆழ்வார், ஏழாம் சந்நிதியில் பெரியாழ்வார், ஆண்டாள் எழுந்தருளியுள்ளனர்.

 

  • வருடத்துக்கு ஒரு முறை மட்டுமே கண்டுகளிக்கும் சேவைகளாக 7 சேவைகள் உள்ளன. அவை பூச்சாண்டி சேவை, கற்பூர படியேற்ற சேவை, மோகினி அலங்காரம், ரத்னாங்கி சேவை, வெள்ளி கருடன் மற்றும் குதிரை வாகனம், உறையூர், ஸ்ரீரங்கம் மற்றும் ஸ்ரீராமநவமி சேர்த்தி சேவை, தாயார் திருவடி சேவை, ஜாலி, சாலி அலங்காரம் ஆகும்.

 

  • ஆறு இரண்டாக பிரியும் இடத்திலுள்ள தீவு போன்ற பகுதியையோ அல்லது அருகருகே செல்லும் இரண்டு ஆறுகளுக்கு இடைப்பட்ட நிலப்பரப்பையோ அரங்கம் என்று கூறுவார்கள். இந்த அடிப்படையில் காவிரிக்கும், கொள்ளிடத்திற்கும் இடைப்பட்ட நிலப்பரப்பில் அமைந்த கோவில் தான் திருவரங்கம் என்னும் பெயர் கொண்ட ஸ்ரீரங்கம்.

 

  • மருத்துவக்கடவுளான தன்வந்திரிக்கு இங்கு சன்னதி இருக்கிறது. மார்பில் மகாலட்சுமி, கைகளில் சங்கு, கரம், அமிர்த கலசம் மற்றும் அட்டைப்பூச்சியுடன் காட்சி தருகிறார்

 

  • வெள்ளிக்கிழமைகளில் ரங்கநாதருக்கு புனுகு சாத்தப்படுகிறது. தினமும் சுவாமிக்கு நைவேத்யத்துடன் சுக்கு, வெல்லக் கலவையையும் படைக்கின்றனர். சுவாமிக்கு ஜீரணமாவதற்காக, இந்த கலவையை தன்வந்திரியே கொடுப்பதாக ஐதீகம். பிரம்மோற்ஸவத்தின் ஏழாம் நாளில், சுவாமிக்கு சூர்ணத்தால் (மருந்துக்கலவை) அபிஷேகம் செய்யப்படுகிறது.

 

  • கோயில் பிரகாரத்தில் அமுத கலசம் ஏந்திய கருடாழ்வாருக்கு சன்னதி இருக்கிறது. அசுரர்களிடம் இருந்து வேதங்களை மீட்ட பெருமாள், அதனை கருடாழ் வாரிடம் ஒப்படைத்தார். இதன் அடிப்படையில் இவர் கையில், வேதங்களை வைத்திருக்கிறார். இவரது சிலை சாளக்ராமத்தால் ஆனது.

 

  • அன்னப்பெருமாள் கோயில் பிரகாரத்தில் தானிய லட்சுமிக்கு சன்னதி இருக்கிறது. இவளுக்கு வலப்புறம் கிருஷ்ணர், இடதுபுறம் நரசிம்மர் இருப்பது வித்தியாசமான அமைப்பு.

 

திருவிழா:

ஸ்ரீ ரங்கம், பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுகிறது. ஆகையால் ஆண்டுக்கு 250 நாட்கள் திருவிழாக்கள் நடைபெறும். ஒவ்வொரு திருவிழாவும் ஸ்ரீரங்கத்திற்கு வரும் பக்தர்களால் கொண்டாடப்படுகிறது. திருவிழா நடைபெறும்போது இந்த கோவில் ஒரு அண்டவெளி அரங்காக உருமாற்றம் செய்யப்பட்டுள்ளதைக் காணலாம்.

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 7.15 வரை, 9.30 முதல்12.30 வரை,

பகல் 2.30 மணி முதல் 5.30 வரை,

இரவு 7 முதல் 9 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு ரங்கநாதர் திருக்கோயில்,

ஸ்ரீரங்கம்-620 006,

திருச்சி மாவட்டம்.

 

போன்:    

+91 – 431- 243 2246.

 

அமைவிடம்:

திருச்சியில் இருந்து 6 கி.மீ., தொலைவில் ஸ்ரீரங்கம் உள்ளது.

Share this:

Write a Reply or Comment

20 − eleven =