August 02 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் மேலக்கடம்பூர்

  1. அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் வரலாறு

சூரனை அழிக்கச்செல்லும் முன் முருகப்பெருமான் இந்த தலத்தில் அம்பாளை வணங்கி வில் வாங்கிச்சென்றார்.

 

மூலவர்        :     அமிர்தகடேஸ்வரர்

உற்சவர்        :     சோமாஸ்கந்தர்

அம்மன்         :     வித்யூஜோதிநாயகி

தல விருட்சம்   :     கடம்பமரம்

தீர்த்தம்         :     சக்தி தீர்த்தம்

புராண பெயர்    :     திருக்கடம்பூர்

ஊர்             :     மேலக்கடம்பூர்

மாவட்டம்       :     கடலூர்

 

ஸ்தல வரலாறு:

பாற்கடலில் அமுதம் கடைந்த தேவர்கள் விநாயகரை வணங்காமல் அதனை பருகச்சென்றனர். இதைக்கண்ட விநாயகர் தேவர்களுக்கு பாடம் புகட்ட எண்ணி அமுதகலசத்தை எடுத்துச் சென்று விட்டார். அவர் கடம்பவனமாக இருந்த இத்தலத்தின் வழியாக சென்றபோது கலசத்தில் இருந்த அமிர்தத்தில் ஒரு துளி தரையில் விழுந்தது. அவ்விடத்தில் சிவன் சுயம்புலிங்கமாக எழுந்தருளினார். தன் தவறை உணர்ந்த இந்திரனும், தேவர்களும் இங்கு வந்து விநாயகரிடம் தங்களது செயலை மன்னித்து அமுதத்தை தரும்படி வேண்டினர். அவர் சிவனிடம் வேண்டும்படி கூறினார். அதன்படி இந்திரன் சிவனை வேண்டினான். அவர் இந்திரனுக்கு அமுத கலசத்தை கொடுத்து அருள்புரிந்தார். இங்கேயே தங்கி அமிர்தகடேஸ்வரர் என்ற பெயரும் பெற்றார். தேவர்களின் தாயான அதிதி தன் மக்களுக்கு அமிர்தம் கொடுத்து அருள் செய்த அமிர்தகடேஸ்வரரை தொடர்ந்து வணங்கி வந்தார். அவர் இதற்காக தினசரி தேவலோகத்திலிருந்து இங்கு வருவதை இந்திரன் விரும்பவில்லை. எனவே இங்குள்ள சிவனை கோயிலோடு இந்திரலோகத்திற்கு எடுத்துச் செல்ல எண்ணி கோயிலை தேர் வடிவில் மாற்றினான். கோயிலை இழுத்துச் செல்ல முயன்றான்.

அப்போது விநாயகர் தேர்ச்சக்கரத்தை தன் காலால் மிதித்துக் கொண்டார். இந்திரன் எவ்வளவோ முயன்றும் ஒரு அடிகூட நகர்த்த முடியவில்லை. விநாயகரின் செயலை அறிந்த அவன் அவரிடம் தான் தேரை எடுத்துச் செல்ல வழிவிடும்படி வேண்டினார். விநாயகர் அவனிடம் கோடி லிங்கங்களை பிரதிஷ்டை செய்தால் தேரை கொண்டு செல்லலாம் என்றார். இந்திரன் ஆணவத்துடன் லிங்கம் செய்தான். ஆனால் எல்லா லிங்கங்களும் பின்னப்பட்டன. தவறை உணர்ந்த இந்திரன் அமிர்தகடேஸ்வரரை வணங்கினான். அவர் ஆயிரம் முறை தன் நாமம் சொல்லி ஒரு லிங்கத்தை செய்யும்படி கூறினார். அதன்படி இந்திரன் ருத்ரகோடீஸ்வர லிங்கத்தை செய்தான். சிவன் அவனுக்கு காட்சி தந்து தான் இங்கேயே இருக்க விரும்புவதாக சொல்லி அதிதிக்கு பதிலாக நீயே இங்கு வந்து என்னை தரிசிக்கலாம் என்றார். இந்திரனும் ஏற்றுக்கொண்டு தன் தவறுக்கு மன்னிப்பு பெற்றான். தற்போதும் தினசரியாக இங்கு இந்திரன் பூஜை செய்து கொண்டு இருக்கிறார்.

கோவில் 3 நிலை ராஜ கோபுரத்துடன் உள்ளது. கோபுரம் வழியே உள்ளே நுழைந்தால் நேரே உள்ள முன் மண்டபத்தில் நந்தியும், பலிபீடமும் இருக்கக் காணலாம். கொடிமரமில்லை. முன்மண்டபத்தில் நின்று பார்த்தால் நேரே மூலவர் சந்நிதியும் வலதுபுறம் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதியும் உள்ளன. கருவறை வெளிப்புறம் முழுவதும் சிற்பங்கள் நிறைந்து காணப்படுகின்றன. சனீஸ்வரருக்கு ஆரம்ப காலத்தில் கழுகு வாகனமாக இருந்தது. ராமரின் தந்தையான தசரதர் அவருக்கு கழுகுக்கு பதிலாக காகத்தை கொடுத்தார். இங்குள்ள சனீஸ்வரர் கழுகு வாகனத்துடன் காட்சி தருகிறார். எனவே இவர் ராமாயண காலத்திற்கும் முற்பட்டவர் ஆகின்றார்.

 

கோயில் சிறப்புகள்:

  • சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 34 வது தேவாரத்தலம் மேலக்கடம்பூர்.

 

  • இங்குள்ள சிவலிங்கம் நவபாஷாணத்தால் செய்யப்பட்டதாகும்.

 

  • பங்குனி மாதம் 3, 4, 5 ஆகிய தேதிகளில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. ஐப்பசி அன்னாபிஷேகத்தின் போது இரவில் சந்திர ஒளி சுவாமி மீது விழுகிறது.

 

  • கருவறை தேர் சக்கரங்களுடன் குதிரை இழுப்பதைப் போன்று தேர் வடிவில் அமைந்துள்ளது.

 

  • குஞ்சிதபாத நடராஜர் சற்றே பின்புறமாக சாய்ந்தபடி சிவகாமியுடன் இருக்கிறார். கோஷ்ட சுவரில் 63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாறு சிற்பமாக உள்ளது.

 

  • வலப்பக்க சுவரில் அர்த்தநாரீஸ்வரர் நந்தியுடன் இருக்கிறார். அவருக்கு கீழே ரங்கநாதர் பள்ளிகொண்ட கோலத்தில் இருக்கிறார். பின்புற சுவரில் மகாவிஷ்ணு அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். இவர் கையில் சிவலிங்கத்தை வைத்தபடி காட்சி தருகிறார், இவருக்கு அருகில் ஆண்டாள், கருடன், ஆஞ்சநேயர் ஆகிய மூவரும் இருக்கின்றனர்.

 

  • விமானத்தில் தட்சிணாமூர்த்தி புல்லாங்குழல் வீணையுடன் இருக்கிறார்.

 

  • கடம்ப மரங்கள் சூழ்ந்த இடமாதலால் இத்தலத்திற்கு ‘கடம்பூர்’ என்ற பெயர் ஏற்பட்டது. இக்கோயில் ‘மேலைக்கடம்பூர்’ என்றும், இவ்வூரின் கீழ்ப்புறத்தே மற்றொரு கோயில் உள்ளதால் அது ‘கீழக்கடம்பூர்’ என்றும் அழைக்கப்படுகிறது. இது தேவார வைப்புத் தலம். இந்திரன் இக்கோயிலை தனது கரத்தால் அகழ்ந்து தேவலோகத்திற்குக் கொண்டு போக முயன்றதால் ‘கரக்கோயில்’ என்றும் அழைக்கப்படுகிறது.

 

  • சூரனை அழிக்கச்செல்லும் முன் முருகன் இங்கு அம்பாளை வணங்கி வில் வாங்கிச்சென்றார். எனவே இங்குள்ள உற்சவர் முருகன் கையில் வில்லுடன் இருக்கிறார்.

 

  • செவ்வாய் கிரகம் தனக்கு அதிபதியான முருகனை இத்தலத்தில் வழிபட்டுள்ளார். இதன் அடிப்படையில் இங்கு செவ்வாய் கிரகம் உற்சவராக இருக்கிறார்.

 

  • அருகிலுள்ள துர்க்கை கட்டை விரல் இல்லாமல் சிம்ம வாகனத்துடன் இருக்கிறாள். இவளுக்கு கீழே மேரு மலை ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த சக்கரம் இருக்கிறது.

 

  • நவக்கிரகங்கள் ஒவ்வொருநாளும் தங்களுக்கான நாளில் இங்கு சிவனை வழிபடுகின்றனர்.

 

  • அம்பாள் காலையில் வீணை ஏந்தி சரஸ்வதியாகவும் உச்சிக்காலத்தில் யானையுடன் லட்சுமியாகவும் மாலையில் சூலாயுதத்துடன் துர்க்கையாகவும் காட்சி தருகிறாள். இதனால் இவளை வித்யஜோதிநாயகி (வித்யா – சரஸ்வதி, ஜோதி – லட்சுமி, நாயகி – துர்க்கை) என்று அழைக்கப்படுகிறாள். இவளுக்கு ஜோதிமின்னம்மை என்றும் பெயரும் உண்டு.

 

  • ரிஷபதாண்டவர் இத்தலத்தில் ரிஷபதாண்டவமூர்த்தி நந்தி மீது நடனமாடிய கோலத்தில் 10 கைகளுடன் உற்சவராக இருக்கிறார். இவருக்கு பிரதோஷத்தின் போது சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அன்று ஒருநாள் மட்டுமே இவரை தரிசிக்க முடியும். இவருக்கு கீழே பீடத்தில் பார்வதி, திருமால், பைரவர், வீரபத்திரர், விநாயகர், நாரதர், நந்திதேவர், பிருங்கி, மிருகண்ட மகரிஷி, கந்தர்வர் மற்றும் பூதகணங்கள் இருக்கின்றன.

 

  • பிரகாரத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி நந்தியின் மீது அமர்ந்த கோலத்தில் இருக்கிறார்.

 

  • இந்திரனின் ஆணவத்தை போக்கிய விநாயகர் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவருக்கு ஆரவார விநாயகர் என்று பெயர். அமிர்த கலசத்தை தூக்கிச்சென்றும் தேர் சக்கரத்தை மிதித்தும் ஆரவாரம் செய்ததால் இவருக்கு இந்த பெயர் வந்தது. இவர் தலையை இடதுபுறமாக சாய்த்தபடி கோப முகத்துடன் காட்சி தருகிறார்.

 

  • தேர் வடிவில் அமைந்த கோயில் இது. விநாயகர் சக்கரத்தை மிதித்தன் அடையாளமாக இடது பக்க சக்கரம் பூமியில் பதிந்து இருக்கிறது. கி.பி. 1110-ல் முதலாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்ட கோவில்.

 

  • முருகப் பெருமான் இந்திரன் வழிபட்டுள்ளனர்.

 

  • திருநாவுக்கரசர் என் கடன் பணிசெய்து கிடப்பதே என்று இத்தலத்தில்தான் பதிகம் பாடினார்.

 

  • திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் பாடல்கள் பாடியுள்ளனர்.

 

  • வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், “பாரில் உடம்பு ஊர் பவத்தை ஒழித்து அருளும் மேன்மைக் கடம்பூர் வாழ் என் இரண்டு கண்ணே” என்று போற்றி உள்ளார்.

 

திருவிழா: 

சிவராத்திரி, அன்னாபிஷேகம், ஆருத்ரா தரிசனம், புரட்டாசியில் சம்பந்தர் ஞானப்பால் அருந்திய உற்சவம்.

 

திறக்கும் நேரம்:

காலை 7.30 மணி முதல்10 மணி வரை,

மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்,

மேலக்கடம்பூர்- 608 304.

கடலூர் மாவட்டம்.

 

போன்:    

+91- 4142 262646, 264 638, 93456 56982

 

அமைவிடம்:

சிதம்பரத்தில் இருந்து 22 கி.மீ., தூரத்தில் காட்டுமன்னார்குடி சென்று அங்கிருந்து 6 கி.மீ., சென்றால் இக்கோயிலை அடையலாம். பஸ் வசதி உண்டு.

Share this:

Write a Reply or Comment

5 − three =