May 27 2023 0Comment

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் மயிலம்

  1. அருள்மிகு மயிலம் சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     சுப்ரமணிய சுவாமி 

அம்மன்         :     வள்ளி, தெய்வயானை

தல விருட்சம்   :     நொச்சி

புராண பெயர்    :     மயூராசலம்

ஊர்             :     மயிலம்

மாவட்டம்       :     விழுப்புரம்

 

ஸ்தல வரலாறு :

முருகப் பெருமானால் போரில் சூரபத்மன் தோற் கடிக்கப்பட்டான் அவன் மனம் திருந்தி, இறையருள் வேண்டி… மயிலம் வந்து மயில் வடிவ மலையாக மாறி கடும் தவம் புரிந்தான். தவத்தில் மகிழ்ந்து முருகன் அவனுக்கு காட்சி தந்தார். அப்போது ‘‘என்னை தங்கள் வாகனமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்!’’ என முருகனிடம் சூரபத்மன் வேண்டினான். மேலும் ‘‘மயில் வடிவ மலையாக இருந்து நான் தவம் புரிந்த இந்த மலைக்கு ‘மயூராசலம்’ எனப் பெயர் வழங்க வேண்டும். தாங்கள் எந்த நாளும் இங்கு வீற்றிருந்து அன் பர்களுக்கு அருள் புரிய வேண்டும்!’’ என்றும் கோரிக்கை வைத்தான். உடனே முருகன் அவனிடம் ‘‘எதிர் காலத் தில் பாலசித்தர் என்பவர் இங்கு தவம் புரிவார். அப்போது உன் விருப்பம் நிறைவேறும்!’’ என்று கூறிவிட்டு மறைந்தார். சூரபத்மன், அதுவரை மலையாக நிலை கொண்டு அங்கு காத்திருந்தான். ‘மயூரா சலம்’ என்ற இந்தப் பெயரே பின்னர் மயிலம் என்று மருவியது என்கிறார்கள்.

கயிலாயத்தில் மேற்கு வாயிலின் சிவகணத் தலைவரான பணியாற்றியவர் சங்கு கன்னர். இவர் சிவபெருமானின் திருவிளையாடல்படி பூவுலகில் வீரசைவநெறி தழைக்கவும், சித்தர்களின் கொள்கைகளை தெளிவுபடுத்தவும், தென்னாட்டில் பிறக்க பணிக்கப்பட்டார். அப்போது முருகனுடன் போர் செய்ய வேண்டிவரும் என்றும், அந்த சமயத்தில் சிவனின் அருளும், முருகனின் அருளும் கிடைக்கும் என்றார் கயிலைநாதன். அதன்படியே இன்றைய மயிலம் மலைக்கு கிழக்கேயுள்ள விழுப்புரம் மாவட்டம், பொம்மையார் பாளையம் என்ற ஊரில் இளம் பாலகனாக சங்கு கன்னர் தோன்றினார். பால வயதிலேயே சித்து வேலைகளைச் செய்ததால் “பாலசித்தர்’ என்று பெயர் பெற்றார். மயிலம் மலைக்கு வந்து தவமியற்றினார்.

பாலசித்தர், முருகப்பெருமானைக் காண வேண்டும் என்ற பேராவலில் கடுந்தவம் புரிந்தார். ஆனால், முருகன் பாலசித்தர் புகழ் உலகம் அறிய வேண்டும் என்று காட்சி தர மறுத்தார். முருகனின் துணைவியர்களான வள்ளி-தெய்வானை இருவரும் முருகப்பெருமானிடம் எவ்வளவு எடுத்துச் சொல்லியும் முருகன் செவிசாய்க்க மறுத்தார். இதனால், கோபங்கொண்ட தேவியர் இருவரும், பாலசித்தரின் ஆசிரமம் வந்து சேர்ந்தனர். தேவியர்களைக் காணாமல் தவித்த முருகன், வேடன் வடிவம் தாங்கி, அவர்களைத்தேடி மயிலம் மலைக்கு வந்து சேர்ந்தார். வேடனைக் கண்ட பாலசித்தர், வந்தவர் யாரென்று அறியாமல், பெண்களைக் கவர வந்த கள்வன் என நினைத்து, வேடனுடன் போர் புரிந்தார். கடும் சண்டைக்குப் பிறகு, முருகன் தன் வேடத்தைக் களைத்தார். உண்மையை உணர்ந்த பாலசித்தர் முருகப்பெருமானை வணங்கி மகிழ்ந்து, வரம் வேண்டி நின்றார். மயிலம் மலை மீது நிரந்தரமாக திருமணக்கோலத்தில் காட்சி தந்து, நாடிவரும் பக்தர்களுக்கு அருள் வழங்கவேண்டும் என முருகனை வேண்டினார்.

பாலசித்தரின் வேண்டுகோளின்படியே, இன்றும் திருமணக்கோலத்திலேயே பக்தர்களுக்கு காட்சியருளுகிறார் மயிலம் முருகப்பெருமான். பாலசித்தரின் திருவருளால் அம்மலை அம்மாள் திருவயிற்றில் அவதரித்த சித்தர் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய தேசிகர். இவரே இம்மலையில் உள்ள திருக்கோயிலை நிர்வாகம் செய்யும் தொன்மையான பொம்மபுர ஆதீனத்தை நிறுவியவர். இவரைத்தொடர்ந்து இன்று இந்த பொம்மபுர ஆதீனத்தின் இருபதாம் பட்டம் ஆதீனத்தை நிர்வாகம் செய்து, மயிலம் முருகன் திருக்கோயில் மற்றும் சமயப்பணி, சமுதாயப் பணிகளையும் சிரமேற்கொண்டு வருகின்றனர்.

மலையடிவாரத்தில் சுந்தர விநாயகர், பாலசித்தர், அக்னி தீர்த்தம் உள்ளது. மலையின் மீது திருக்கோயில் அமைந்துள்ளது. மேலே செல்ல எளிதான படிகள் அமைந்துள்ளன. வாகனத்தில் வருவோர் வசதிக்காக மலைப்பாதையும் உள்ளது. மலைமீது ஐந்து நிலை ராஜகோபுரம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ஆலயத்தில் மூன்று சந்நிதிகள். விநாயகர், பாலசித்தர் அதிஷ்டானம், வள்ளி தெய்வானை உடனுறை சுப்பிரமணிய சுவாமி கிழக்கு நோக்கி அருள் புரிகின்றனர்.

 

கோயில் சிறப்புகள் :

  • மயிலம் கோயிலில் முருகன் மூன்று விதமான உற்ச வராகக் காட்சியளிக்கிறார். இவர்களில் பிரதான உற்சவர் வள்ளி- தெய்வானை சமேதரான பாலசுப்பிரமணியர். பகலில் வெள்ளிக்காப்பு அணிந்தும், மாலை பூஜைக் குப் பிறகு தங்கக் காப்பு அணிந்தும் அருள் பாலிக்கும் இவர் மாதாந்திர கார்த்திகைகளிலும், பங்குனி உத்தரப் பெருவிழாவிலும் வீதியுலா வருகிறார். மலையைச் சுற்றி இருக்கும் மூன்றாம் பிராகாரத்தில் வீதியுலா நடக்கிறது.

 

  • இரண்டாவது மூலவர் வள்ளி- தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி. பரணி நட்சத்திரத்தின்போது வீதியுலா வரும் இவர், தினசரி சுற்றுப் பிராகாரத்தில் இருந்தபடி அருள் பாலிக்கிறார். மாசிமக தீர்த்தவாரியின்போது இந்த உற்சவரை புதுவை கடற்கரைக்குத் தோளில் சுமந்து செல்கிறார்கள். 5 நாட்கள் அங்கிருந்தவாறே அருள் வழங்கும் இவர் 6&வது நாளன்று திரும்பி வருவார்.

 

  • மூன்றாவது உற்சவர் ஆறுமுகங்கள் கொண்ட சண்முகப் பெருமான். கந்த சஷ்டி உற்சவத்தின்போது ஆறு நாட்கள் வீதியுலா வருவது இவர்தான்.

 

  • முருகனுக்கு மிகவும் உகந்த நொச்சி மரங்கள் மயிலம் மலையில் ஏராளமாக உள்ளன. தினமும் காலை பூஜையின்போது நொச்சி இலைகளை மாலையாகத் தொடுத்து மூலவருக்கும், உற்சவ மூர்த்திகளுக்கும் அணிவிக்கிறார்கள். அதன் பிறகே மற்ற பூமாலைகளை அணிவிக்கிறார்கள்.

 

  • மூலவர் வீற்றிருக்கும் கருவறை மண்டபத்துக்கு வெளியில் பிரமாண்டமான வேலும் மயிலும் இருக்கின்றன. மயிலம் கோயிலில் செவ்வாய்க் கிழமை தோறும் காலசந்தி பூஜையின் போது வேலாயுதத்துக்கு அர்ச்சனை செய்கிறார்கள்.

 

  • உற்சவமூர்த்தி முருகப்பெருமானின் அருகில் அவரின் படைத் தளபதியான வீரபாகுவும் உற்சவராக இருக்கிறார்.

 

  • பொதுவாகவே சித்தர்கள் ஜீவசமாதி அடைந்த தலங்களில், பக்தர்களுக்கு வேண்டும் வரங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. எவரிடமும் சரணடையாத முருகனது வேலாயுதம், பாலசித்தரிடம் வசமானது என்பது ஐதீகம். இதிலிருந்து பாலசித்தரின் சக்தி விளங்கும். இன்றைக்கும் மயிலத்தில் நடக்கும் கந்த சஷ்டி விழாவின்போது சூர சம்ஹாரத்துக்குக் புறப்படும் முருகர், பாலசித்தரிடமிருந்தே வேலாயுதத்தைப் பெற்றுச் செல்கிறார்.

 

  • வள்ளி- தெய்வானையுடன் இணைந்து நின்ற கோலத்தில் காட்சி தரும் முருகனின் ஒரு கையில் வேல். இன்னொரு கையில் சேவற்கொடி. பெரும்பாலான கோயில்களிலும் முருகனின் வாகனமான மயில் தெற்கு நோக்கியோ, நேராகவோ இருக்கும். இங்கு மட்டும் வடக்குத் திசையை நோக்கியபடி இருப்பது கோயிலின் சிறப்பு. தவத்துக்கு உரிய திசை வடக்கு. சூரபத்மன் இங்கு வடக்கு நோக்கித் தவமிருந்து முருகனின் வாகனமாக மாறியதால், அதே திசையை நோக்கியபடி அமரும் பெருமை இங்குள்ள மயில் வாகனத்துக்கு கிடைத்திருக்கிறது.

 

  • முருகன் திருமணக்கோலத்திலேயே எந்நேரமும் காட்சி அளிப்பதால் திருமணம் தொடர்பான எந்த வேண்டுதல்களும் எளிதில் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை..

 

  • மயிலம் திருத்தலத்தை அருணகிரிநாதர், ஸ்ரீசிவப்பிரகாச சுவாமிகள் போற்றி பாடியுள்ளனர்

 

  • இந்த கோவில் ஒரு சிறிய குன்றின் மீது, நெடிய ராஜகோபுரத்துடன் விளங்குகிறது. பசுமையான மரங்கள் சூழ்ந்து இருப்பதால், தூரத்தி லிருந்து பார்க்கும்போது அந்த குன்று ஒரு மயில் தோகை விரித்திருப்பது போல் அழகாகக் காட்சியளிக்கிறது. கோபுரமானது மயிலின் கொண்டை போல உச்சியில் இருக்கிறது. கோயிலைப் போலவே இந்த மலையையும் புனிதமாகக் கருதி பக்தர்கள் வழி படுகிறார்கள்.

 

திருவிழா: 

பங்குனியில் பிரமோற்சவம், தைப்பூசம், மாசி மகம், வைகாசி விசாகம், கிருத்திகை, பாலசித்தர் குரு பூஜை எனப் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

பங்குனி உத்திரம் இங்கு பன்னிரண்டு நாட்கள் பிரம்மோற்சவமாக விமரிசையாக நடக்கிறது. முருகனுக்கு மயில் மட்டுமின்றி, பல்வேறு விதமான வாகனங்கள் இருப்பதாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. இதை நினைவுறுத்தும் விதமாக பங்குனி உத்தரப் பெருவிழாவில் திருமணக் கோலத்தில் தினம் ஒரு வாகனத்தில் முருகன் வீதியுலா வருகிறார். மயில், யானை, ஆட்டுக் கிடா, நாகம், பூதம் என விதம் விதமான வாகனங்களில் வலம் வருவார் இந்த மூலவர்.

 

திறக்கும் நேரம்:

காலை 6:00 மணி முதல் மதியம் 1:00 வரையும்

மாலை4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரையில் கோவில் நடை திறந்திருக்கும்.

ஞாயிறு மற்றும் விழாக்காலங்களில் கோவில் முழு நேரம் திறந்திருக்கும்

 

முகவரி:  

அருள்மிகு மயிலம் முருகன் கோயில்

மயிலம் – 604304

விழுப்புரம் மாவட்டம்.

 

போன்:

04147-241223.

அமைவிடம் :

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகில் இருக்கிறது மயிலம். புதுவை, விழுப்புரம், திண்டிவனம் ஆகிய நகரங்களி லிருந்து அடிக்கடி பஸ்கள் உண்டு. சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கூட்டேரிப்பட்டு என்ற நிறுத்தத்தில் இறங்கினால் அங்கிருந்து 3 கி.மீ. தூரத்தில் இருக்கிறது

 

இதற்கு பக்கத்திலேயே திருவக்கரை வக்ரகாளியம்மன், பஞ்சவடி ஆஞ்சநேயர் ஆகிய கோயில்கள் இருப்பதால் எல்லாவற்றையும் தரிசிக்கலாம் .

 

 

 

 

 

 

Share this:

Write a Reply or Comment

2 × 2 =