January 15 2020 0Comment

போகிப் பண்டிகை:

போகிப் பண்டிகை:

போகிப் பண்டிகை மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின் பெயர் போக்கிப் பண்டிகை என்பதாகும். இது பின்னர் மருவி போகிப்பண்டிகை என்றாகிவிட்டது.

இந்த நாள் பழையன கழித்து, புதியன புகவிடும் நாளாகக் கருதப்படுகிறது. ஆடி மாதத்தில் பயிரிட்ட அரிசியை மார்கழியில் அறுவடை செய்து, மார்கழி கடைசி அன்று புதிதாக வீட்டிற்கு கொண்டு வருவார்கள்.

காப்புக் கட்டுதல் :

போகிப்பண்டிகையின் தொடக்கமே வீட்டில் காப்புக் கட்டும் நிகழ்ச்சியாகும். தைத்திருநாளை வரவேற்க, வீட்டின் கூரையில் காப்புக் கட்டிய பிறகே, பொங்கல் கொண்டாட்டம் தொடங்குகிறது.

காப்புக் கட்டுவதின் முக்கிய நோக்கம் சுத்தமாகிய வீட்டிற்குள் கெட்டது எதுவும் வராமல் இருப்பதற்காகவும் மாவிலை, வேம்பு இலை, ஆவாரம் பூ, பூளைப்பூ ஆகியவற்றை சேர்த்து கட்டப்படும்.

மாவிலை காற்று மண்டலத்தில் ஆக்ஸிஜன் செறிவை அதிகப்படுத்தி காற்றை சுத்தப்படுத்தும். கூரைப்பூ (கண்ணுப்பிள்ளைப்பூ) பூச்சிகள் பிரவேசத்தை தடுக்கும்.

விஷ முறிவுக்கு உதவும். வேம்பு இலை நோய் எதிர்ப்பு தன்மை கொண்டது. கொசுக்களை தடுக்கும். ஆவாரம் பூ சர்க்கரை நோய், தோல் வியாதிகளை தடுக்கும்.

தும்பைச் செடி மார்கழி பனி முடிந்து, கோடை துவங்குவதால் ஏற்படும் காலநிலை பிணிகளை குணமாக்கும். பூளைப்பூ வெற்றியின் சின்னமாக கருதப்படுகிறது.

இந்திரனுக்கு நன்றி செலுத்துதல் :

மழை பொழிய வைக்கும் கடவுள், வருணன். அவனுக்கு அரசனாகத் திகழ்ந்து இயக்குபவன் இந்திரன். இந்திரனுக்கு போகி என்றொரு பெயர் உண்டு. மழை பெய்தால்தான் பயிர்கள் செழிக்கும்! உயிர்கள் வாழும்!. எனவே பண்டைய நாட்களில் வருணனின் அதிபதியான இந்திரனை போகியன்று பூஜித்து நன்றி செலுத்துவார்கள்.

பழைய பொருட்களை எரித்தல் :

பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற வகையில் போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு முன்னரே வீட்டை வெள்ளையடித்து சுத்தம் செய்து புது வர்ணம் பூசி வீட்டை அழகுப்படுத்துவார்கள்.

அப்போது தேவையற்ற பழைய பொருட்களை ஓரத்தில் ஒதுக்கி வைப்பார்கள். மனதில் இருக்கும் பழந்துயரங்களை அழிப்பதால் இப்பண்டிகையைப் போக்கி என்றனர். போகியன்று அந்தப் பழைய பொருட்களைத் தீயிலிட்டுக் கொளுத்துவது வழக்கம். அப்போது குழந்தைகள், சிறு பறை கொட்டிக் கொண்டாடுவார்கள்.

விளைச்சல் முடிந்து பிறக்கும் ஆண்டு புதுமையாய், மகிழ்ச்சிகரமாய் இருக்க வேண்டும் எனவும், தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்படவேண்டும் என்பதே இந்த கொண்டாட்டத்தின் வெளிப்பாடாகும்.

மகர சங்கராந்தி :

போகி அன்று வாசலில் காப்புக்கட்டுவார்கள். உப்பு சேர்க்காமல் மொச்சை, சர்க்கரைவள்ளிக்கிழங்கு வேகவைத்து சங்கராந்தி கடவுளுக்கு படைப்பார்கள்.

ஒவ்வொரு வீட்டிற்கும் சங்கராந்தி கடவுள் வரும் என்பது நம்பிக்கை. சங்கராந்தி கடவுள் வரும் விதத்தை பொருத்து நன்மை ஏற்படும் என்பார்கள். தீமை ஏதும் ஏற்படும் என்றால் எல்லா வீடுகளிலும் பரிகாரம் செய்வார்கள்.

அன்றைய தினம், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள், தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும். வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்பட வேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும்.

சங்கராந்தி என்பது சூரியன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்வதைக் குறிக்கிறது. சூரியன், தனுர் ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் பெயர்வதால், அந்த நாளை ‘மகர சங்கராந்தி” என்றும் போற்றுவார்கள்.

இந்தப் பூவுலகம் சிறப்புற இயங்கத் தேவையான ஒளியையும், அதன் மூலம் சக்தியையும் அளிக்கும் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் வகையில் கொண்டாடுவதே தைத் திருநாளின் முக்கிய நோக்கமாகும்.

Share this:

Write a Reply or Comment

eighteen − 9 =