February 21 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் மதுரை

  1. அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     இம்மையிலும் நன்மை தருவார்

உற்சவர்        :     சோமாஸ்கந்தர்

அம்மன்         :     மத்தியபுரி நாயகி

தல விருட்சம்   :     தசதள வில்வம்

தீர்த்தம்         :     ஸ்ரீபுஷ்கரிணி

புராண பெயர்    :     மதுரையம்பதி

ஊர்             :     மதுரை

மாவட்டம்       :     மதுரை

 

ஸ்தல வரலாறு:

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு வெளியே, மதுரை நகருக்குள் நான்கு திசைகளிலும் உள்ள கோவில்கள் “உள் ஆவரணம்” என அழைக்கப்படுகிறது. இதேபோல் மதுரை நகருக்கு வெளியேயும் நான்கு திசைகளிலும் நான்கு ஆலயங்கள் உள்ளன. இவை “வெளி ஆவரணங்கள்” என்று புகழப்படுகின்றன. மதுரை நகருக்கு வெளியே தெற்கில் திருப்பரங்குன்றம், மேற்கில் திருவேடகம், வடக்கில் திருவாப்பனூர், கிழக்கில் திருப்புவனம் ஆகிய திருக்கோவில்களில் அமைந்துள்ளன. இவையே வெளி ஆவரணம் என்று கூறப்படுகிறது. இதே போல் மதுரை நகருக்குள், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு வடக்கு திசையில் குபேரன் வழிபட்ட பழைய சொக்கநாதர் கோவில், மேற்கு திசையில் சிவபெருமானே தன்னை அர்ச்சித்துக் கொண்ட இம்மையில் நன்மை தருவார் கோவில், கிழக்கு திசையில் வெள்ளை யானை வழிபட்ட ஐராவத நல்லூர் முக்தீஸ்வரர் கோவில், தெற்கில் எமன் வழிபட்ட தென்திருவாலவாய் கோவில் ஆகியவை உள்ளது. இவை அனைத்தும் உள் ஆவரணக் கோவில்களாகும்.

இம்மையிலும் நன்மை தருவார் இறைவன் தன்னைத்தானே தோற்றுவித்து வழிபட்ட பெருமை உடையதாக கருதப்படும் மத்தியபுரி அம்பாள் எனும் பெயரில் மீனாட்சி அம்மன் சமேத இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோவில் மேலமாசி வீதியில் உள்ளது. இம்மையில் நன்மை தருவார் கோவில் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் தென்மேற்கு திசையில் இருக்கிறது.

 

மதுரையை ஆட்சி செய்த மலையத்துவஜ பாண்டியனின் மகளாகப் அவதரித்தவர் மீனாட்சி. பார்வதியின் அம்சமான மீனாட்சி, தன் தந்தையின் காலத்திற்குப் பின் மதுரையை ஆட்சி புரிகிறாள். மீனாட்சியை மணம் புரியும் மணமகனாக வருபவர் சுந்தரேஸ்வரர் எனும் சிவபெருமான்.  மாப்பிள்ளையான சுந்தரேஸ்வரர், மன்னராகப் பொறுப்புக்கு வருகிறார். ஆட்சி பீடத்தில் அமரும் முன்னர் சிவபூஜை செய்ய வேண்டும் என்பது நியதியாகும். அதனால் சுந்தரேஸ்வரர், தன் ஆத்மாவை சிவலிங்கமாக்கி, பூஜை செய்கிறார். அதன் பின்பு மன்னராக ஆட்சிப் பொறுப்பை ஏற்றார் என்கிறது தலபுராணம்.

சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் மேற்கு முகமாய் சிவபூஜை செய்கின்றனர். சிற்ப வடிவில் இருவரையும் காண்பது நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. சுந்தரேஸ்வரரான சிவபெருமானுக்கே அருளிய லிங்கமாகத் திகழ்வதால், இவருக்கு “இம்மையிலும் நன்மை தருவார்’ என்ற திருநாமம் வழங்கப்படுகிறது. இவ்வாலய முகப்பு வாயில் மேற்கு முகமாய் அமைந்துள்ளது. இத்தலம் மிகவும் தொன்மையானது என்பதற்கு சங்க இலக்கியப் பாடல்கள் பல சான்றாக அமைந்துள்ளன. கல்லாடம், பரிபாடல் மற்றும் திருவிளையாடல் புராணம் எனப் பல்வேறு இலக்கியங்களில் இத்தலத்தின் சிறப்புகள் கூறப்பட்டுள்ளன.

 

கோயில் சிறப்புகள்:

 

  • எந்தக் கோவிலுக்கு போனாலும் சிவலிங்கத்தின் முன் பகுதியையே நாம் தரிசிப்போம். ஆனால், இந்தக் கோவிலில் மட்டும் லிங்கத்தின் பின்புற தரிசனமும் நமக்கு கிடைக்கிறது. இங்கே சிவன் அம்பாளுடன் மேற்கு நோக்கி அமர்ந்து லிங்க பூஜை செய்கிறார். எனவே, லிங்கத்தின் முன்பகுதி அவர்களை நோக்கி இருக்கிறது. பக்தர்களுக்கு பின்புற தரிசனம் கிடைக்கிறது.

 

  • ஒருவர் செய்த பாவத்தை இந்தப் பிறவியிலேயே மன்னித்து நன்மை தருபவர் என்பதால் இவரை “இம்மையிலும் நன்மை தருவார்’ என அழைக்கப்படுகிறார்.

 

  • சுவாமி சந்நிதியின் வலதுபுறம் தனி சந்நிதியில் தெற்கு நோக்கிய அன்னை நடுவூர்நாயகி நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். அன்னைக்கு மத்தியபுரி அம்மன் என்ற திருநாமமும் உள்ளது.

 

  • மீனாட்சியம்மன் கோவிலில் சிவனுக்கு பட்டாபிஷேகம் நடக்கும் முன்னதாக சிவன்- அம்பாள் இருவரும் இங்கு எழுந்தருள்வார்கள். இவ்விருவரையும் மூலஸ்தானத்தை நோக்கி வைத்து, இம்மையிலும் நன்மை தருவார், சுந்தரேஸ்வரர், மீனாட்சி மூவருக்கும் ஒரே சமயத்தில் தீபாராதனை, பூஜை நடக்கும். இந்த பூஜையை சிவனே செய்வதாக ஐதீகம் ஆகும்.

 

  • பத்து இலைகளுடன் கூடிய தசதள வில்வ மரம் இந்த ஆலயத்தின் தல விருட்சமாக உள்ளது.

 

  • ஆலயத்தில் அறுபது மற்றும் எண்பதாம் வயதில் உள்ளவர்கள் திருமணம் செய்து கொள்ளும் நிகழ்வுகள் அதிக அளவில் நடைபெறுகின்றன.

 

  • மதுரையில் திருவிளையாடல் நிகழ்த்திய சிவன் வல்லப சித்தராக வந்து கல்யானையை கரும்பு தின்னச் செய்தார். இவர் பத்மாசனத்தில் வலது கையில் ஆகாயம் காட்டி, இடக்கையில் சாம்பிராணி குங்கிலியம் வைத்து காட்சி தருகிறார்.

 

  • பொதுவாக செம்பில் தான் ஸ்ரீசக்கரம் வரைந்து பிரதிஷ்டை செய்யப்படும். ஆனால், இங்கு கல் ஸ்ரீசக்கரம் இருப்பது வித்தியாசமான அமைப்புடன் காணப்படுகிறது.

 

  • மத்தியபுரி நாயகி சன்னிதிக்கு பின்புறம், அரசமரத்தின் அடியில், லிங்கோத்பவர் காட்சி தருகிறார்.

 

  • இக்கோவிலில் பூஜையின் போது அர்ச்சகர், சுயரூப சிவன் மற்றும் லிங்கத்தின் மத்தியில் நின்று கொண்டு லிங்கத்தை பூஜிப்பார். இங்கு லிங்கத்திற்கு மட்டுமே அபிஷேகம் நடக்கிறது. சுய வடிவில் இருக்கும் சிவனுக்கு அமாவாசை, பவுர்ணமி மற்றும் மார்கழியில் 30 நாட்கள் என வருடத்திற்கு 54 முறை மட்டும் தைலாபிஷேகம் நடத்தப்படும். சிவராத்திரியன்று இரவில் ஹோமத்துடன் சங்காபிஷேகம் நடக்கும்.

 

  • மதுரையிலுள்ள பஞ்சபூத தலங்களில் இது பிருத்வி (நிலம்) தலம் ஆகும்.

 

  • கோவில் முன் மண்டபத்திலுள்ள காசி விஸ்வநாதர், வெள்ளை நிறத்தில் காட்சி தருகிறார். அருகில் விசாலாட்சி இருக்கிறாள். சிவபக்தனான ராவணனை அழித்து சீதையை மீட்ட ராமர், தோஷம் நீங்க ராமேஸ்வரத்தில் மணல் லிங்கத்தை பூஜித்தார். இந்த நிகழ்வின் அடிப்படையில் இங்கும் அதே போன்ற மணல் லிங்கம் ஸ்தாபிக்கப்பட்டது. இவருக்கு பின்புறம் கையில் கோதண்டத்துடன் ராமர் காட்சியளிக்கிறார்.

 

  • இத்தலத்தில் ஜுரத்தைக் குணப்படுத்தும் ஜுரதேவர், மனைவி ஜுரசக்தியுடன் வீற்றிருந்து அருள்கிறார். உடல் உபாதை, ஜுரம் உள்ளவர்கள் மிளகு ரசம், காரமான புளியோதரை சாதம் நைவேத்யம் படைத்து வேண்டிக்கொள்கிறார்கள்.

 

  • அம்மன் கோயில்களில் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் நிறைவேற்றுவதை பார்த்திருப்பீர்கள். ஆனால், சிவன் கோயிலில், அதுவும் முருகனுக்கு பூக்குழி இறங்கும் வைபவம் நடப்பதை பார்த்திருக்கிறீர்களா? இக்கோயிலில் பக்தர்கள் முருகனுக்கு பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள். வைகாசி விசாகத்திற்கு மறுநாள் இந்த வைபவம் நடக்கிறது.

 

  • “பூலோக கைலாயம்’ என்றழைக்கப்படும் இத்தலம், மீனாட்சியம்மன் கோயிலின் தென்மேற்கு திசையில் அமைந்துள்ளது.

 

திருவிழா: 

மாசியில் பிரம்மோற்ஸவம், வைகாசி விசாகம், ஆவணியில் சிவன் பூஜை, சிவராத்திரி, திருக்கார்த்திகை.

 

திறக்கும் நேரம்:

காலை 6.15 மணி முதல் 11.30 மணி வரை,

மாலை 4.30 மணி முதல் இரவு மணி 9.30 வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில்,

மேலமாசி வீதி,

மதுரை-625 001.

 

போன்:    

+91- 452- 6522 950, +91- 94434 55311,+91-93451 55311,+91- 92446 55311

 

அமைவிடம்:

மதுரை மத்திய பஸ் ஸ்டாண்டிலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் உள்ள மேலமாசிவீதியில் இக்கோயில் உள்ளது.

 

Share this:

Write a Reply or Comment

seventeen + 18 =