January 13 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் சிங்கம்புணரி

  1. அருள்மிகு சேவுகப் பெருமாள் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     சேவுகப் பெருமாள்

தல விருட்சம்   :     வில்வம்

தீர்த்தம்         :     புஷ்கரிணி, விரிசிலை ஆற்று நீர், ஆலய உட்பிரகாரத்திலுள்ள வற்றாக்கிணற்று நீர்

ஊர்             :     சிங்கம்புணரி

மாவட்டம்       :     சிவகங்கை

 

ஸ்தல வரலாறு:

பல்லாண்டுகளுக்கு முன்பு, வில்வ வனமாக இருந்த இப்பகுதிக்கு வேட்டையாட வந்த வேடுவர் ஒருவர், மானைக்கண்டு அதன்மீது அம்பு எய்தார். தப்பிய மான் இங்கிருந்த மரப்பொந்து ஒன்றுக்குள் புகுந்து மறைந்தது. அதனை பிடிக்க வேடுவர் முயன்றபோது, புதருக்குள் ஒரு அய்யனார் சிலை இருந்தது. வியப்படைந்த வேடுவன், “சேவுகபெருமாளே. மானைத் தேடிப் போன நான் இன்று முதல் உனக்கு சேவகம் செய்யும் பாக்கியம் பெற்றேன்” என்றதுடன், “பெருமாளே” என்று சொல்லியும் வணங்கினான். அன்று முதல் இவர், “சேவுகப்பெருமாள் அய்யனார்” என்ற பெயரில் காவல்தெய்வமாக அருளுகிறார்.

 

கோயில் சிறப்புகள்:

  • இத்தலத்து அய்யனார் வீராசனத்தில், தலையில் மகுடம், யோகப்பட்டை அணிந்து, பூரணை, புஷ்கலையுடன் அருள்பாலிக்கிறார்.

 

  • அய்யனாருக்கு வலதுபுறம் காவல் தெய்வமான பிடாரியம்மன், இடதுபுறம் சுயம்பிரகாசேஸ்வரர் என்னும் பூவைவல்லி உடனாய தான்தோன்றீஸ்வரர் தனித்தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளனர்.

 

  • சாஸ்தா என்றும் ஐயப்பன் என்றும் போற்றப்படும் தெய்வங்களின் அம்சமான அய்யனார் காவல் தெய்வமாகப் பல தலங்களில் அருள்பாலிக்கிறார். இத்தல சேவுகப் பெருமாள் அய்யனார் மிகவும் சக்தி வாய்ந்தவர். சிவனுக்குரிய வில்வ இலையைக் கொண்டு இங்கு பூஜை செய்யப்படுகிறது. மேலும் பெருமாளின் திருநாமம் பெற்றுள்ளார். சிவவிஷ்ணுவின் கூட்டணியில் பிறந்ததால், இத்தகைய சிறப்பு இவருக்கு தரப்பட்டுள்ளது.

 

  • தேவர்களின் அரசன் இந்திரன், சாஸ்தாவை வளர்த்து வந்தார். அவரால் வளர்க்க இயலாத சூழ்நிலையில் பூலோகத்தில் உள்ள வேடுவ இனத்தவரிடம் ஒப்படைத்து வளர்க்கக் கூறினார். அவர்கள் அவரை அய்யனாராக பாவித்து காட்டில் மிருகங்களிடம் இருந்து பாதுகாப்பு தர வேண்டி வணங்கினர். காலப்போக்கில் காடுகள் குறைந்து ஊர்கள் பெருகவே ஊரின் எல்லையில் காவல் தெய்வமாக இருக்க வேண்டினர். இவ்வாறு, சாஸ்தாவின் அம்சமான அய்யனார் வழிபாடு உருவாயிற்று.

 

  • அய்யனாரைப் போல அய்யப்பனும் கோள்களின் தீமையை நீக்கும் கடவுளாகத் திகழ்கிறார். ஐ என்ற முதல் நிலையோடு அப்பன் என்ற தந்தையை உணர்த்தும் சொல் இணைந்து அய்யப்பன் என்ற சொல் விளங்குகிறது. அய்யனார், அய்யப்பன் இரண்டும் ஒருவரையே குறிப்பிடக்ககூடிய சொற்கள். அய்யனார் என்பதில் அன், ஆர் என்பன சேர்ந்திருக்க அய்யப்பனில் அப்பன் சேர்ந்திருக்கிறது. சொல்லில் சேரும் சேர்க்கைகள் தான் வேறாகின்றன. உணர்த்தும் பொருளும் சொற்களின் பொருளும் ஒன்றே. சேரநாட்டு அய்யப்பனும் காடுகளுக்கு இடையே மேடான இடத்தில் தான் வீற்றிருக்கிறான். சபரிமலை அய்யப்பன் வழிபாடும் தமிழகத்தின் அய்யனார் வழிபாடும் ஒன்றுபோல விளங்குகின்றன. இரண்டும் அந்தந்த சூழலுக்கு ஏற்ப வளர்ச்சி பெற்று இன்று புகழ் பெற்று விளங்குகின்றன.

 

  • முழுமுதற்கடவுள் மூவருள்ளும் தலைமை பெற்றவர்கள் அரியும் அரனும். இருவரும் ஈன்ற மகனே அரிகரன். அதனால் தான் இந்தப் பகுதியில் (சிவகங்கை மாவட்டத்தில்) சிவன்ராத்திரி அன்று அய்யனார் கோவில்களில் பெரும் சிறப்புடன் விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

 

  • அய்யப்பன் வரலாறு சேரநாட்டுக்குத் தக்கவாறு மன்னன் மகனாகப் பந்தளநாட்டு இளவரசனாக ஐயப்பன் விளங்குவதை எடுத்துரைக்கிறது. அவன் வாழ்வில் சாதிக்க முடியாதவற்றைச் சாதித்து அவன் மிகச்சிறந்த தலைவனாக காட்சி தருகிறான்.

 

  • சபரிமலை ஐயப்பன் திருவுருவத்திற்கும் அய்யனார் திருவுருவத்திற்கும் பெரும் வேறுபாடு இல்லை. அய்யனைப் போல அய்யனாரும் வீராசனமாகவே வீற்றிருக்கிறார். இரண்டு கைகளை அபயவரதமாக அல்ல செண்டாயுதத்தைப் பற்றிக் கொண்டு அய்யனார் வீற்றிருப்பார். யோகப்பட்டை அணிந்திருப்பார். தலையில் மகுடம் உண்டு. அய்யானாருக்கும் அய்யப்பனுக்கும் உருவ அமைப்பில் பெரும் வேற்றுமை இல்லை.

 

  • இத்திருகோவில் அமைந்த இடம் வில்வவனமானபடியால், இங்கு வில்வம் தல விருட்சமாகும். பரிவாரத் தேவதைகள் உட்பட இங்குள்ள அனைத்துத் தெய்வங்களும் வில்வ இலைகளினாலேயே அர்ச்சிக்கப் பெறுகின்றன.

 

  • இக்கோவிலில் சைவமும், வைணவமும் சங்கமிக்கும் சிறப்பு பெற்றதாகவும் உள்ளது. இப்பகுதியில் நடந்த சோழ, பாண்டிய போருக்கு பின்னர் கி.பி. 13-ம் நூற்றாண்டில் மன்னர் கூன்பாண்டியன் காலத்தில் இக்கோவில் கட்டப்பட்டதாக வரலாறு தெரிவிக்கிறது. சுமார் 16 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இக்கோவிலில் சிங்கம்பிடாரி அம்மன், சேவுகப்பெருமாள் அய்யனார், தான் தோன்றீசுவரர், அடைக்கலம் காத்த அய்யனார், கன்னி மூல கணபதி, முருகரும் இருக்கிறார்கள்.,

 

  • இங்குள்ள மும்மூர்த்திக்கு சேவுகப்பெருமாள், சேவுகமூர்த்தி, சேவுகராயன், சேவுகராசன், சேவுகன், சேதுபதி என பல்வேறு திருநாமங்களில் போற்றப்பட்டு வருகிறார். அரிஹர புத்திரராக விளங்கும் இந்த சேவுகமூர்த்தியின் பெயரில் வைணவ திருநாமமான பெருமாள் என்னும் பெயர் கொண்ட போதிலும் சைவ கடவுளாகவே போற்றப்பட்டு வருகிறார்.

 

  • கோவிலுக்கு பக்தர்கள் மாடுகளை காணிக்கையாக நேர்ந்து விடுவது பல ஆண்டுகளாக வழக்கமாக இருந்து வருகிறது. இவ்வாறு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள் காணிக்கையாக நேர்ந்து விடப்பட்டு அந்த மாடுகள் இந்த பகுதியில் உள்ள வீதிகளில் சுற்றி வரும்போது அந்த மாட்டிற்கு பழம், உணவுகளை அப்பகுதி மக்கள் பாசத்துடன் கொடுப்பது வழக்கம். சிங்கம்புணரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் ஏதும் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடந்தால் இந்த கோவில் காளைகளுக்குதான் முதல் மரியாதை செலுத்தப்படுவது இன்று வரை வழக்கத்தில் இருந்து வருகிறது.

 

  • சிங்கம்புணரியில் உள்ள சந்திவீரன் கூடத்தில் சேவுகபெருமாள் அய்யனார் உருவமற்ற சொரூபமாக உள்ளார். இக்கோவிலில் வைகாசி விசாக திருவிழா நடத்தும் பொருட்டு மக்களிடம் காணிக்கை பெற கிராமத்திற்கு வரும் உற்சவ விநாயகர் இங்குள்ள சந்திவீரன் கூடத்தில் 10 நாட்கள் தங்கியிருப்பார். அந்த 10 நாட்களும் கோவிலில் இருந்து கொண்டு வரப்பட்ட நெய்வேத்தியம் கொண்டு விநாயகருக்கு படையல் படைக்கப்படும். பின்னர் 10 நாட்களுக்கு பின்னர் கோவிலுக்கு விநாயகர் திரும்பியவுடன் திருவிழா முறைப்படி தொடங்கும். இந்த கூடத்தில் விநாயகர் வீற்றிருந்து அருள்பாலிக்கும் 10 நாட்களும் அவருடன் சேவுகபெருமாளும் தங்கியிருந்து அருள்பாலிப்பதாக ஐதீகம். மற்ற நாட்களில் இந்த கூடத்திற்கு வரும் பக்தர்கள் சேவுகமூர்த்தியை மட்டும் வணங்குவார்கள்.

 

திருவிழா: 

வைகாசியில் தேர்த்திருவிழா. தேர்நிலைக்கு வரும்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் நேர்த்திக்கடனாக தேங்காய்களை அருகிலுள்ள சுவரில் அடித்து உடைப்பர்.

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை,

மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு சேவுகப் பெருமாள் திருக்கோயில் ,

சிங்கம்புணரி – 630 502

திருப்புத்தூர் தாலுகா,

சிவகங்கை மாவட்டம்.

 

போன்:    

+91- 98650 62422

 

அமைவிடம்:

மதுரையிலிருந்து 60 கிமீ., காரைக்குடியிலிருந்து மேற்கே 55 கி.மீ., தொலைவில் சிங்கம்புணரி உள்ளது. பஸ்ஸ்டாண்டிலிருந்து 1 கி.மீ., தூரத்தில் கோயில் உள்ளது.

Share this:

Write a Reply or Comment

1 × three =