January 07 2024 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்   திருவிடைமருதூர்

  1. அருள்மிகு மகாலிங்கம் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     மகாலிங்கம், மகாலிங்கேஸ்வரர்

அம்மன்         :     பெருமுலையாள், ப்ருஹத் சுந்தர குஜாம்பிகை

தல விருட்சம்   :     மருதமரம்

தீர்த்தம்         :     காருண்யமிர்தம், காவேரி

புராண பெயர்    :     மத்தியார்ச்சுனம்

ஊர்            :     திருவிடைமருதூர்

மாவட்டம்       :     தஞ்சாவூர்

 

ஸ்தல வரலாறு:

அகத்தியர் முனிவர்களோடு இடைமருதூர் வந்தடைந்தார். உமாதேவியை நினைத்து தவம் செய்தார்.உமையும் முனிவர்க்கு காட்சி தந்தார்.முனிவர்கள் முறைப்படி இறைவியை வழிபட்டு விட்டு இறைவனையும் காண வேண்டும் என்று கூற உமையம்மை முனிவர்களுக்காக இறைவனை எண்ணி சிவ தவமிருக்கிறார்.இறைவன் உமையின் தவத்திற்கு இரங்கி உமைக்கும் முனிவர்களுக்கும் இவ்விடத்தில் காட்சி தந்தார். காட்சி தந்து விட்டு ஜோதி லிங்கத்தை இறைவனே வழிபடலானார்.வியப்பு கொண்டு உமையம்மை இறைவனே பிரம்மன் முதலானோரே தங்களை வழிபடுவதுதான் முறை. தாங்கள் தங்களையே வழிபடுகிறீர்களே என்று வினவ உமையே பூசித்தோனும் பூசையை ஏற்றுக் கொண்ட பரம்பொருளும் நாமே. நம்மை நாமே பூசிப்பதற்கு காரணம் இம்முனிவர்கள் நம்மைப் பூசிக்க மறந்துவிட்டனர். அதனாலே பூசிக்கிறேன் என்றார். முனிவர்களும் அன்று தொடங்கி இப்பெருமானை காமிகாவிதிப்படி பூஜை செய்து பெரும் பேறு பெறுவாராயினர் என்று தலவரலாறு கூறுகிறது.

திருவிடைமருதூர் தலம் வரகுண பாண்டியன் என்ற பாண்டிய நாட்டு அரசனின் வாழ்க்கையுடன் சம்பந்தம் உடையதாகும். ஒருமுறை, வரகுண பாண்டியன் அருகிலுள்ள காட்டுக்கு வேட்டையாடச் சென்றான். மாலை நேரம் முடிந்து இரவு தொடங்கிவிட்ட நேரத்தில், அரசன் குதிரை மீதேறி திரும்பி வந்துகொண்டிருக்கும்போது வழியில், உறங்கிக்கொண்டிருந்த ஒரு அந்தணன், குதிரையின் காலில் மிதிபட்டு இறந்துவிட்டான். இச்சம்பவம் அவனறியாமல் நடந்திருந்தாலும், ஒரு அந்தணனைக் கொன்றதால் அரசனை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக்கொண்டது. அத்துடன், அந்தணின் ஆவியும் அரசனைப் பற்றிக்கொண்டது.

சிறந்த சிவபக்தனான வரகுண பாண்டியன், மதுரை சோமசுந்தரரை வணங்கி இவற்றில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டான். மதுரை சோமசுந்தரரும் அரசனுடைய கனவில் தோன்றி திருவிடைமருதூர் சென்று அங்கு தன்னை வழிபடும்படி கூறினார். எதிரி நாடான சோழ நாட்டிலுள்ள திருவிடைமருதூருக்கு எப்படிச் செல்வது என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்த அரசனுக்கு, தன் நாட்டின் மீது சோழ மன்னன் படையெடுத்து வந்திருக்கும் செய்தி கிடைத்தது. சோழ மன்னனுடன் போருக்குச் சென்ற வரகுண பாண்டியன், சோழ மன்னனை போரில் தோற்கடித்து சோழநாடு வரை துரத்திச் சென்றான். அப்போது திருவிடைமருதூர் சென்று இங்குள்ள இறைவனை வழிபட ஆலயத்தினுள் பிரதான கிழக்கு வாயில் வழியாக நுழைந்தான். வரகுண பாண்டியனைப் பற்றியிருந்த பிரம்மஹத்தியும் அந்தணனின் ஆவியும் அரசனைப் பின்தொடர்ந்து கோவிலுக்குள் செல்ல தைரியமின்றி வெளியிலேயே தங்கிவிட்டன. அரசன் திரும்பி வரும்போது மறுபடியும் அவனை பிடித்துக் கொள்ளலாம் என்று காத்திருந்தன.

ஆனால், திருவிடைமருதூர் இறைவனோ வரகுண பாண்டியனை மேற்கு வாயில் வழியாக வெளியேறிச் செல்லும்படி அசரீரியாக ஆணையிட்டு அவனுக்கு அருள்புரிந்தார். அரசனும் பிரம்மஹத்தி நீங்கியவனாக பாண்டிய நாடு திரும்பினான். இதை நினைவுகூரும் வகையில், இன்றளவும் இவ்வாலயத்துக்கு வரும் பக்தர்கள் பிரதான கிழக்கு வாயில் வழியாக உள்ளே சென்று, மேற்கிலுள்ள அம்மன் சந்நிதி கோபுரவாயில் வழியாக வெளியே செல்லும் முறையைக் கடைப்பிடித்து வருகிறார்கள். இன்றும் அக்கோயிலில் சிலையாக வீற்றிருக்கும் பிரம்மஹத்தியை, நாம் கிழக்கு கோபுர வாயில் உள்ளே நுழைந்தவுடன் முன் மண்டபத்தில் இடதுபுறம் ஒரு உயர்ந்த இடத்தில் இருப்பதைக் காணலாம். மன்னர் சென்ற வழியில் மீண்டும் திரும்பி வருவார். அவரை மீண்டும் பிடித்துக்கொள்ளலாம் என்று பிரம்மஹத்தி அமர்ந்துள்ளது என்பது ஐதீகம்.

 

கோயில் சிறப்புகள்:

  • திருவிடைமருதூரில் உள்ள சிவாலயம் சுமார் 1200 வருடங்களுக்கு மேல் பழமையான ஒரு ஆலயமாகும்.

 

  • மருத மரத்தைத் தல விருட்சமாகக் கொண்ட மூன்று கோயில்கள் உள்ளன. வடக்கே ஸ்ரீசைலம் என்று அழைக்கப்படும் தலம் வடமருதூர்; தெற்கே திருநெல்வேலி மாவட்டத்தில் புடார்ச்சுனம் என்றழைக்கப்படும் திருப்புடை மருதூர். இவை இரண்டுக்கும் இடையே உள்ள இத்தலம் இடைமருதூர் என்று அழைக்கப்படுகிறது.

 

  • நெடிதுயர்ந்த கோபுரங்களும் நீண்ட பிரகாரங்களும் கொண்டு காட்சி அளிக்கும் இவ்வாலயம், மத்யார்ஜுனம் என்று வழங்கப்படுகிறது.

 

  • மூர்த்தி, தலம் மற்றும் தீர்த்தம் ஆகிய மூன்றின் சிறப்புகளாலேயே ஒரு கோயில் பெருமை பெறுகின்றது. அந்தவகையில், இந்தத் திருவிடைமருதூர், இறைவன் அருள்மிகு மஹாலிங்க சுவாமியின் சிறப்புகள் கணக்கில் அடங்கா. தேரோடும் நான்கு வீதிகளின் கோடிகளிலும் விஸ்வநாதர், ஆத்மநாதர், ரிஷிபுரீஸ்வரர் மற்றும் சொக்கநாதர் ஆகியோருக்கு நான்கு சிவாலயங்களும், நடுவிலே மஹாலிங்கப் பெருமானும் அமர்ந்திருப்பதால், இத்தலம் பஞ்சலிங்கத் தலமென்றும் அழைக்கப்படுகிறது.

 

  • மேற்கே அமைந்துள்ள சொக்கநாதர் ஆலயத்துக்குத் தனிப் பெருமை ஒன்றுண்டு. மழையின்றி மக்கள் வறட்சியால் வருந்தும் காலங்களில் இப்பெருமானுக்கு சிறப்பாகப் பூசை வழிபாடுகளைச் செய்து, மேகராகக்குறிஞ்சிப் பண்களில் அமைந்த தேவாரப் பதிகங்களை பாராயணம் செய்வதால் மழை பொழிவது இன்றளவும் நடைபெற்று வரும் அதிசயமாகும்.

 

  • இக்கோவில் மூன்று பிராகாரங்களைக் கொண்டதாகும். இம்மூன்று பிராகாரங்களிலும் வலம் வருதல் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது.

 

  • அஸ்வமேதப் பிராகாரம் இது வெளிப் பிராகாரமாகும். இந்தப் பிராகாரத்தில் கோவிலை வலம் வருதல், அஸ்வமேத யாகம் செய்த பலனைக் கொடுக்கும் என்று புராண வரலாறுகள் கூறுகின்றன.

 

  • கொடுமுடிப் பிராகாரம் இது இரண்டாவதும், மத்தியில் உள்ள பிராகாரமாகும். இப்பிராகாரத்தை வலம் வருதல், சிவபெருமான் குடியிருக்கும் கைலாச பர்வதத்தை வலம் வந்ததற்குச் சமம் என்று கூறப்படுகிறது.

 

  • ப்ரணவப் பிராகாரம் இது மூன்றாவதாகவும், உள்ளே இருக்கக்கூடியதுமான பிராகாரமாகும். இப்பிராகாரத்தை வலம் வருவதால் மோட்சம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

 

  • இத்தலத்தில் உள்ள இறைவன் சுயம்பு லிங்க மூர்த்தியாகும்.

 

  • இறைவன் மகாலிங்கேஸ்வரர், தன்னைத்தானே அர்ச்சித்துக்கொண்டு பூசை விதிகளை சப்தரிஷிகள் மற்றுமுள்ள முனிவர்களுக்குப் போதித்து அருளிய தலம் திருவிடைமருதூர்.

 

  • மார்க்கண்டேய முனிவருக்கு அவரின் விருப்பப்படி அர்த்தநாரீஸ்வரர் உருவத்தில் இத்தலத்து இறைவன் காட்சி கொடுத்துள்ளார்.

 

  • இவ்வாலயத்தில் உள்ள மூகாம்பிகை சந்நிதி மிகவும் புகழ் பெற்றது. அம்பாள் சந்நிதிக்கு தெற்குப் பக்கம் இந்த மூகாம்பிகை சந்நிதி அமைந்துள்ளது. மூகாசுரனை கொன்ற பாவம் நீங்க மூகாம்பிகை இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டாள். மூகாம்பிகை சந்நிதி அருகில் உள்ள மகாமேரு சந்நிதியில், பெளர்ணமியன்று மேருவுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. மூகாம்பிகைக்கு இந்தியாவில் திருவிடைமருதூரிலும், கர்நாடக மாநிலத்திலுள்ள கொல்லூரிலும் பட்டும் தனிச் சந்நிதி இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

  • கோயில்கள் பலவற்றுள்ளும், இந்தக் கோயிலில்தான் மிகப்பெரிய எண்ணிக்கையில், அதாவது 32 தீர்த்தங்கள் உள்ளன என்பது வியக்கவைக்கும் செய்தி. இவற்றில், ஒரு ஏக்கர் பரப்புள்ள காருண்யாம்ருத தீர்த்தம் மிகவும் புகழ் வாய்ந்தது. அதுபோலவே, கலியாணத் தீர்த்தம் எனப்படும் பூசத்தீர்த்தமும் சக்தி வாய்ந்தது. தைப்பூசத் திருநாளில் இத்தீர்த்தத்தில் நீராடுவோர் பாபவிமோசனம் பெறலாம் என்பர். இங்குள்ள தீர்த்தங்களில் நீராடி மகப்பேறு பெற்றவர் வரலாறும் உண்டு.

 

  • பூசத்தீர்த்தம் பற்றிய ஒரு சுவையான செய்தி உண்டு. தேவவிரதன் என்ற கள்வன் ஒருவன் இறைவனது திருவாபரணங்களைக் திருட முயன்ற பாவத்துக்காக நோய் வந்து இறந்துபோனான். பிறகு அவன் ஒரு புழுவாய்ப் பிறந்து பூசத்தீர்த்தத்தில் நீராடிய ஒரு புண்ணியவான் கால் பட்டு புழு உருவம் நீங்கி முக்தி பெற்றான் என்று ஆலய வரலாறு கூறுகிறது.

 

  • இத்தல விநாயகர் அருள்மிகு மகாலிங்கப் பெருமானைப் பூசித்து பல உயிர்களும் உய்யும் வண்ணம் அரசாட்சி செய்து வந்தமையால் இவ்விநாயகப் பெருமான் அருள்மிகு ஆண்ட விநாயகர் என்னுந் திருநாமம் பூண்டு எழுந்தருளியுள்ளார்.

 

  • இத்தலம் சண்பகாரணியம், சத்திபுரம், தபோவனம், ஜோதிநகர், சர்வதீர்த்தபுரம், வில்வாரணியம், தருமவிருத்திபுரம், முத்திபுரம், பூலோக சிவலோகம், வீரசோழநகரம் முதலிய காரணப்பெயர்களைக் கொண்டு விளங்குகிறது.

 

  • இத்தலத்தில் மகாலிங்கப் பெருமானுக்கு பூசை நடந்தபிறகே விநாயகப் பெருமானுக்கு பூசை நடைபெரும்.

 

  • 27 நட்சத்திரங்களுக்கும், 27 லிங்கங்கள் ஆடல்வல்லான் மண்டபத்தில் அமைந்துள்ளன.

 

  • பட்டினத்தார் வாழ்க்கை வரலாற்றுக்கும் இந்த திருவிடைமருதூர் கோயிலுக்கும் உள்ள தொடர்பு நெருக்கமானது. பட்டினத்தார் இத்தலத்து மருவாணர் குறித்து பல பாடல்கள் பாடியுள்ளார்.இவரது சீடர் பத்திரகிரியார் ஆவார். இவர் ஒரு நாட்டுக்கே ராஜாவாக இருந்து விட்டு துறவு பூண்டு பட்டினத்தாரின் சீடரானவர். சிவதலம் தோறும் தரிசித்து வந்து இருவரும் திருவிடைமருதூர் வந்த தங்கினர். பட்டினத்தார் திருவோடு கூட வைத்துக் கொள்வதில்லை. சீடரோ திருவோடும், ஒருநாயையும் உடன் வைத்திருந்தார். இறைவன் ஒருநாள் அடியார் உருவில் வந்து பட்டினத்தாரிடம் பிச்சை கேட்டார். பட்டினத்தார் நானோ பரதேசி என்னிடம் தருவதற்கு ஏதுமில்லை.,இதே கோயிலின் மேலைக்கோபுரம் அருகே ஒரு சம்சாரி இருப்பான் என்றார். இறைவனும் அவ்விடத்திற்கு சென்று அங்கிருந்த பத்திரகிரியாரிடம் பிச்சை கேட்க தன்னை இந்த திருவோடும்,நாயும் நம்மை சம்சாரியாக்கி விட்டதே என்று வருந்தி ஓட்டை நாயின் மீது எறிந்தார்.ஓடும் உடைந்தது.நாயும் உயிர் விட்டது.பின்பு இறைவன் தோன்றி பத்திரகிரியாருக்கும், நாய்க்கும் முக்தி அளித்தார்.அந்த முக்தி தந்த இடம் இன்றும் உள்ளது. கிழக்கு மட வீதியில் நாயடியார் கோயில் என்று இன்று அழைக்கப்படும் அந்த இடத்தை இத்தலத்துக்கு வந்தால் இன்றும் காணலாம்.

 

  • இத்தலத்து மூலவரை மையமாகக் கொண்டு பரிவார சன்னதிகளாக திருவலஞ்சுழி விநாயகர் சன்னதியாகவும், ஆலங்குடி தட்சிணாமூர்த்தி சன்னதியாகவும், சுவாமிமலை சுப்பிரமண்யர் சன்னதியாகவும், திருவாரூர் சோமாஸ்கந்தர் சன்னதியாகவும், திருவாவடுதுறை நந்தி தேவர் சன்னதியாகவும், திருச்சேய்ஞலூர் சண்டிகேஸ்வரர் சன்னதியாகவும், , சீர்காழி பைரவர் சன்னதியாகவும் வழங்கப்படுகிறது.

 

  • பட்டினத்தார் இத்தலம் குறித்து பல பாடல்கள் பாடியுள்ளார்.

 

  • மாணிக்கவாசகருக்கு பெருமான் திருவடி தீட்சை தந்தருளிய தலம். பிரம்மா, இந்திரன், இந்திராணி, குபேரன், அக்னி, சந்திரன் ஆகியோர் வழிபட்ட தலம்.
  • அருணகிரிநாதர் இத்தலத்து முருகனை தமது திருப்புகழில் பாடியுள்ளார்.

 

  • திருஞானசம்பந்தர் ஆறு பதிகங்களும், திருநாவுக்கரசர் ஐந்து பதிகங்களும், சுந்தரர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர்.

 

  • மாணிக்கவாசகர் தமது திருவாசகத்தில் இத்தலத்தைப் பாடியுள்ளார்.

 

  • காவிரிக் கரையில் உள்ள 6 சிவஸ்தலங்கள் காசிக்கு சமானமாக கருதப்படுகின்றன. அவற்றில் திருவிடைமருதூர் தலமும் ஒன்றாகும். மற்றவை 1. திருவையாறு, 2. திருசாய்க்காடு (சாயாவனம்), 3. திருவெண்காடு, 4. திருவாஞ்சியம் மற்றும் 5. மயிலாடுதுறை ஆகும்

 

திருவிழா: 

தை மாதம் – தைப்பூசம் – 10 நாட்கள் திருவிழா –

வைகாசி மாதம் – வசந்த உற்சவ பெருவிழா – 10 நாட்கள் திருவிழா

 

திறக்கும் நேரம்:

காலை 6மணி முதல் 11 மணி வரை,

மாலை மணி 5 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு ஜோதி மகாலிங்க சுவாமி திருக்கோயில்,

திருவிடைமருதூர் – 612 104.

தஞ்சாவூர் மாவட்டம்.

 

போன்:    

+91- 435- 2460660.

 

அமைவிடம்:

கும்பகோணம் – மயிலாடுதுறை சாலையில் திருவிடைமருதூர் உள்ளது. இத்தலத்துக்கு கும்பகோணத்திலிருந்து பேருந்து வசதி உண்டு. முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : கும்பகோணம் – 9 கி.மீ. தஞ்சை – 40 கி.மீ. ஆடுதுறை – 3 கி.மீ.

 

Share this:

Write a Reply or Comment

3 + eleven =