May 19 2023 0Comment

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் திருக்கழிப்பாலை

  1. அருள்மிகு பால்வண்ணநாதர் திருக்கோயில் வரலாறு

 

 

மூலவர்        :     பால்வண்ணநாதர்

அம்மன்         :     வேதநாயகி

தல விருட்சம்   :     வில்வம்

தீர்த்தம்         :     கொள்ளிடம்

புராண பெயர்    :     திருக்கழிப்பாலை, காரைமேடு

ஊர்             :     திருக்கழிப்பாலை

மாவட்டம்       :     கடலூர்

 

ஸ்தல வரலாறு :

கபிலமுனிவர் ஒவ்வொரு சிவத்தலங்களாக தரிசித்து வரும் போது, வில்வ வனமாக இருந்த இப்பகுதியில் தங்கி சிவபூஜை செய்ய நினைத்தார். இப்பகுதியில் பசுக்கள் தானாக பால்சுரந்து வந்த காரணத்தினால் மணல் முழுவதும் வெண்ணிறமாக காட்சியளித்தது. முனிவர் இந்த வெண்ணிற மணலை எடுத்து லிங்கம் அமைத்து வழிபாடு செய்தார். ஒருமுறை அந்த வழியாக வந்த மன்னனது குதிரையின் கால் குளம்பு, மணல் லிங்கத்தின்மீது பட்டு லிங்கம் பிளந்து விடுகிறது. மனம் நொந்த முனிவர் பிளவுபட்ட லிங்கத்தை எடுத்துவிட்டு வேறு லிங்கம் பிரதிஷ்டை செய்ய நினைத்த போது, எம்பெருமான் உமையவளுடன் நேரில் அருட்காட்சி தந்து, முனிவரே! பசுவின் பால் கலந்த வெண்ணிற மணலில் செய்த லிங்கம் பிளவு பட்டிருந்தாலும் அதை அப்படியே பிரதிஷ்டை செய்து விடுங்கள். காமதேனுவே பசுவடிவில் இங்கு வந்து பால்சொறிந்துள்ளது. எனவே இந்த லிங்கத்தை வழிபடுபவர்கள் சகல செல்வங்களும் அடைவார்கள் என்றார்.

 

கோயில் சிறப்புகள் :

  • சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 4 வது தேவாரத்தலம் திருக்கழிப்பாலை.

 

  • மூலவர் பால்வண்ணநாதர். மூலவர் பெயருக்கேற்ப வெண்ணிறமாக சுயம்பு மூர்த்தியாக மிகச் சிறிய பாணத்துடன் காட்சியளிக்கிறார். ஆகையால் இறைவன் பால்வண்ண நாதேஸ்வரர் என்ற திருநாமத்தை பெற்றார்.

 

  • அம்பாள் வேதநாயகி. புராண பெயர் காரைமேடு. இன்று சிவபுரி எனப்படுகிறது.

 

  • குதிரையின் கால் குளம்பு பட்டு பிளந்து போன வெண்ணிற லிங்கத்திற்கு தான் இன்றும் பூஜை நடக்கிறது. மேற்புறம் சதுரமாக வழித்தெடுத்தாற்போல் நடுவில் பள்ளத்துடன் அதிசயமான அமைப்புடன் லிங்கத் திருமேனி காட்சி தருகின்றது. அபிஷேகத்தின்போது பால் மட்டும்தான் இப்பள்ளத்தில் தேங்கும். மற்ற அபிஷேகங்கள் அனைத்தும் ஆவுடையாருக்குத்தான் நடைபெறுகிறது.

 

  • குதிரையின் கால் குளம்பு பட்டு பிளந்து போன வெண்ணிற லிங்கத்திற்கு தான் இன்றும் பூஜை நடக்கிறது. லிங்கத்திற்கு பின்னால் சிவனும் பார்வதியும் திருமணக்கோலத்தில் உள்ளனர்.

 

  • கிழக்கு நோக்கிய 3 நிலை ராஜ கோபுரம். உள்பிரகார நுழைவு வாசலின் இருபுறமும் அதிகார நந்தியர் தமது துணைவியருடன் உள்ளனர்.

 

  • பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்ரமணியர், கஜலட்சுமி, விஷ்ணு, பிரம்மா, அகோர மூர்த்தி, முயலகன் மாறிய நிலையில் தெட்சிணாமூர்த்தி, கிராதமூர்த்தி, நாயன்மார்கள், சதுரா துர்க்கை, புவனேஸ்வரி ஆகியோர் உள்ளனர்.

 

  • இத்தலம் முன்பு கொள்ளிட ஆற்றின் வடகரையில் கரைமேடு என்னுமிடத்தில் இருந்ததால், இத்தலத்திற்கு கழிப்பாலை என்ற பெயர் இருந்தது. கொள்ளிட ஆற்றின் வெள்ளப்பெருக்கால் கோயில் முழுவதும் சிதலமடைந்து விட்டது. எனவே தற்போது உள்ள இடத்தில் கோயில் கட்டி, அதில் கழிப்பாலை இறைவனையும், இறைவியையும் பிரதிஷ்டை செய்துள்ளார்கள்.

 

  • இங்குள்ள பைரவர் காசியில் உள்ளது போல நாய் வாகனம் இல்லாமல், 27 மண்டை ஓட்டுடன், பூணூல் அணிந்து, சர்ப்பத்தை அரைஞான அணிந்து, ஜடாமுடி, சிங்கப்பல்லுடன் தனிக்கோயிலில் அருளுகிறார். காசியில் பைரவரை வடிவமைத்த சிற்பியே இங்குள்ள பைரவரையும் வடிவமைத்ததாக கூறப்படுகிறது.

 

  • இத்தல பைரவரை வணங்கினால் காசி பைரவரை வணங்கிய பலன் கிடைக்கும் என புராணங்கள் கூறுகின்றன. எனவே இப்பகுதி மக்கள் இத்தலத்தை பைரவர் கோயில் என்றே அழைக்கின்றனர். தேய்பிறை அஷ்டமி இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

 

  • அகத்தியருக்கு காட்சி தந்த தலங்களில் இதுவும் ஒன்று. வால்மீகி முனிவர் இங்கு வழிபாடு செய்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. அருணகிரிநாதர் இத்தல முருகன் மீது திருப்புகழ் பாடியுள்ளார்.

 

  • இங்குள்ள நடராஜரின் சடைமுடி அள்ளிமுடிந்த கோலத்தில் உள்ளது. அருகில் சிவகாமியம்மன், தன் தோழிகளான விஜயா, சரஸ்வதியுடன் உள்ளது தனி சிறப்பாகும்.

 

  • இக்கோயில் உள்ள அதே தெருவில் ‘சிவபுரி’ அழைக்கப்படும் ‘திருநெல்வாயில்’ என்னும் மற்றொரு தேவாரத் தலம் உள்ளது.

 

  • திருஞானசம்பந்தர் 2 பதிகங்களும், அப்பர் 4 பதிகங்களும், சுந்தரர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர்.

 

  • வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், “செல்வாய்த் தெழிப்பாலை வேலைத் திரை ஒலி போல் ஆர்க்கும் கழிப்பாலை இன்பக் களிப்பே” என்று போற்றி உள்ளார்.

 

திருவிழா: 

தைப்பூசம், நவராத்திரி, கார்த்திகை சோமவாரம், ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை.

 

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11 மணி வரை,

மாலை 5 மணி முதல் இரவு 7.15 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு பால்வண்ணநாதர் திருக்கோயில்,

திருக்கழிப்பாலை-608 002,

சிவபுரி போஸ்ட், அண்ணாமலை நகர்,

சிதம்பரம் தாலுகா,

கடலூர் மாவட்டம்.

 

போன்:    

+91- 98426 24580.

 

அமைவிடம் :

சிதம்பரத்திலிருந்து, கவரப்பட்டு செல்லும் வழியில் 3 கி.மீ. தூரத்தில் உள்ள சிவபுரிக்கு அடுத்து திருக்கழிப்பாலை உள்ளது. பைரவர் கோயில் என்றால் தான் அனைவருக்கும் தெரியும்.

 

Share this:

Write a Reply or Comment

seventeen + 11 =