January 07 2018 0Comment

21.திருவிண்ணகர்

இது 108 திவ்ய தேச வைணவக் கோவில்களில் ஒன்றாகும்.
புராண பெயர்(கள்): திருவிண்ணகர்
பெயர்: திருவிண்ணகர் உப்பிலியப்பன் / ஒப்பிலியப்பன்
கோயில் தகவல்கள்:
மூலவர்: ஒப்பிலியப்பன்(உப்பிலியப்பன், திருவிண்ணகரப்பன்)
உற்சவர்: பொன்னப்பன்
தாயார்: பூமாதேவி
தீர்த்தம்: அகோராத்ர புஷ்கரணி
மங்களாசாசனம்
பாடல் வகை: நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்
பேயாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார்
கல்வெட்டுகள்: உண்டு
பெயர்க்காரணம்:
திருவிண்ணகர் என்பது பழம்பெயர், திருவிண்ணகர் சேர்ந்த அப்பன் தன் ஒப்பார் இல்லப்பன்.
ஒப்பிலியப்பன் என்ற பெயர் பெருமாளுக்கு அமைந்தது. காலப்போக்கில் ஒப்பிலியப்பன் என்பது உப்பிலியப்பன் என மருவிற்று. இதனால், உப்பிலியப்பன் கோயில் என்ற பெயரும் விண்ணகருக்கு அமைந்தது.
பூமாதேவியை திருமால் திருமணம் செய்து கொண்டு உப்பில்லாமல் அவள் சமைத்த உணவை உண்டதால் உப்பிலியப்பன் என்றாகி விட்டது என்றும் சொல்வதுண்டு. உப்பிலியப்பனுக்கு உப்பில்லாத நிவேதனமே உகந்தது என்பதால் இன்றும் உப்பில்லாத திருவமுதை பெருமாளுக்கு நிவேதனம் செய்கின்றனர்.
இத்தலம் செண்பகவனம், ஆகாசநகரம், திருவிண்ணகர், மார்க்கண்டேய க்ஷேத்திரம், ஒப்பிலியப்பன் கோவில், தென் திருப்பதி என்ற பெயர்களும் இத்தலத்திற்கு உண்டு. நம்மாழ்வாருக்கு ஐந்து வடிவங்களில் காட்சி அளித்துள்ளார். அவை பொன்னப்பன், ம்ணியப்பன், முத்தப்பன், என்னப்பன், திருவிண்ணகரப்பன்.
முற்காலத்தில் மிருகண்டு மகரிஷியின் புத்திரன் மார்கண்டேய மகரிஷி பூமாதேவி தனக்கு மகளாகவும் திருமால் மாப்பிள்ளை ஆக வேண்டும் என கடும் தவம் செய்தபோது துளசி வனத்தில் அழகிய பெண் குழந்தையைக் கண்டு வியந்து எடுத்து பூமாதேவி என பெயர்சூட்டி வளர்த்தார். திருமணவயதை அடைந்தாள். அவதார நோக்கம் நிறைவேறும் காலம் வந்தது.
திருமால் வயது முதிர்ந்த அந்தணர் வேடம் பூண்டு மார்கண்டேயர் குடிலுக்கு வந்து பூமாதேவியைத் தனக்கு மணம் முடிக்கும்படி கேட்க ஏதேதோ கூறியும் கேட்கவில்லை. மகளுக்கு உப்பு போட்டு சமைக்க தெரியாது என கூறினார். விடவில்லை திருமால். செய்வதறியாது கண்மூடி பெருமானை வேண்டி கண் திறந்தபோது உப்பிலியப்பனே முன் தோன்றி உன்னிடம் வளர்ந்தது பூமாதேவியே என உரைத்து மணம் முடித்தார்.
மார்க்கண்டேயர் விருப்பம் நிறைவேறியது. இன்றும் உப்பில்லாமல் உணவு நைவேத்தியம் செய்து வழங்கப்படுகிறது. ஒவ்வொரு வருட ஐப்பசி சிரவண நட்சத்திரத்தன்று திருக்கல்யாணம் சிறப்பாக நடக்கும்.  திருப்பதி பெருமாளுக்கு அண்ணனாக உப்பிலியப்பன் கருதப்படுகிறார். இங்கு சென்றாலே திருப்பதி சென்ற பலன் கிட்டும்.
அமைவிடம்:
கும்பகோணத்தில் இருந்து தென்கிழக்கில் காரைக்கால் செல்லும் நெடுஞ்சாலையில் 8 கி.மி. தொலைவில் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து நகரபேருந்து வசதி உள்ளது.
Share this:

Write a Reply or Comment

eighteen − 18 =