May 13 2018 0Comment

பிரத்யங்கிரா தேவி கோவில்:

 
பிரத்யங்கிரா தேவி திருக்கோவில்:
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திற்கு அருகே உள்ள அய்யாவாடியில் பிரத்தியங்கிராதேவிக்கு தனிக் கோவில் உள்ளது. 
பிரத்தியங்கிரா தேவி சக்தியின் வடிவமாகக் கருதப்படும் இந்து சமயப் பெண் தெய்வம் ஆவார். 
பிரத்யங்கரா தேவி சக்தியின் உக்கிரமான வடிவங்களில் ஒன்றாகும்.
சுவாமி : அருள்மிகு  அகத்தீஸ்வரர்
அம்பாள் : அருள்மிகு தர்மசம்வர்த்தினி (பிரத்யங்கிரா தேவி)
தீர்த்தம் : புத்திர தீர்த்தம்
தலவிருட்சம் : ஆல மரம்
அமைப்பு :
இங்கு கோவில் கொண்டுள்ள தேவி சிம்ம முகத்தோடும் 18 திருக்கரங்களோடும் 4 சிம்மம் பூட்டிய ரதத்தில் லட்சுமி சரஸ்வதியோடு காட்சி தருகிறாள்.
கும்பகோணம் திருநாகேஸ்வரத்துக்கு அருகில் உள்ள அய்யவாடியில் குடிகொண்டிருக்கும் தேவியின் ஆலயத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்றைக்கும் சுடுகாடுகள் இருக்கின்றன.
தல வரலாறு :
மகாவிஷ்ணு ராமாவதாரம் எடுத்து பூமிக்கு வந்த போது சீதையை ராவணன் கடத்திச் சென்று விட்டான். ராமன் அவனுடன் போரிட இலங்கை சென்றார். தன் சகோதரர்களையும் மகன்களையும் வரிசையாக ராமனுடன் போரிட அனுப்பிய ராவணன் எல்லாரையும் இழந்தான். 
மிகுந்த பலசாலியான இந்திரஜித் ஒருவன் மட்டும் எஞ்சியிருந்தான். காளி பக்தனான இந்திரஜித் ராமனை போரில் தோற்கடிப்பதற்காக அவளை வேண்டினான். மன்னர்கள் அக்காலத்தில் போரில் வெற்றி பெறுவதற்காக எட்டுத்திசைகளில் மயான பூமியை தோற்றுவித்து அதர்வணகாளியான பிரத்யங்கிரா தேவிக்கு நிகும்பலா யாகம் நடத்துவார்கள்.
அந்த யாகத்தை இந்திரஜித்தும் பிரம்மாண்டமாக நடத்தினான். நிகும்பலா யாகம் மட்டும் முடிந்து விட்டால் இந்திரஜித் மாபெரும் சக்தியை அடைந்து விடுவான். 
அதன் பின் அவனை போரில் வெல்ல யாராலும் முடியாது. இந்த விஷயம் ராமனுக்கு தெரிந்து விட்டது.
ராமபிரானும் பிரத்யங்கிரா தேவிக்கு சிறப்பு பூஜைகள் செய்தார். இந்திரஜித் அநியாய வெற்றி பெறுவதற்காக யாகம் நடத்துவதையும் பரமாத்மாவான ராமன் நியாயத்திற்காக யாகம் நடத்துவதையும் அறிந்து கொண்டாள் பிரத்யங்கிரா.
 ராமரின் யாகத்திற்கும் அவரது நியாயமான கோரிக்கைக்கும் செவி சாய்த்த தேவி அவருக்கு அனுக்கிரஹம் புரிந்தாள்.
தன் நீண்ட நாள் பக்தனாயினும் அநியாயத்துக்கு துணைபோன இந்திரஜித்தின் பூஜையை ஏற்க மறுத்துவிட்டாள். 
எனவே இந்திரஜித் போரில் தோற்றான். இருந்தாலும் தன் பக்தன் என்ற முறையில் அவனது வீரம் ராமாயணத்தில் புகழப்படும் வகையில் ஆசி தந்தாள்.
மந்திர தந்திரங்கள் என கூறிக்கொண்டு பிரத்யங்கிராதேவியை முதன்மைப்படுத்தி நாச காரியங்களில் ஈடுபடுகிறவர்களை பிரத்யங்கிராதேவி நிச்சயமாக அழித்துவிடுவாள்.
இவளை நம்பி வணங்கும் பக்தர்களை  காப்பாற்றி எல்லாவிதமான ஐஸ்வர்யங்களையும் கொடுக்கிறாள்.
Share this:

Write a Reply or Comment

twelve − five =