May 13 2018 0Comment

சுக்ரீஸ்வரர் திருக்கோவில்:

 

சுக்ரீஸ்வரர் திருக்கோவில்: 

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சுக்ரீஸ்வரர் கோயில் ராமாயண காப்பியத்துடன் தொடர்புடையது வானர அரசன் சுக்ரீவன் தனது அண்ணனைக் கொன்றதற்குப் பிராயச்சித்தம் செய்ய இங்குள்ள ஈசனுக்கு லிங்கம் அமைத்து வழிபட்டதால் இக்கோவில் சுக்ரீஸ்வரர் என பெயர் பெற்றது.

தலச் சிறப்பு :

இத்தல மூலவர் சுக்ரீஸ்வரர் குரக்குத்தளி ஆடுடைய நாயனார் என்றும் அழைக்கப்படுகிறார்.

இறைவனின் கருவறைக்கு வலது புறம் #ஆவுடைநாயகி அம்பாள் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார். 

எந்த சிவன் கோவில்களிலும் இல்லாத சிறப்பாக இந்த ஆலய மூலவரின் கருவறைக்கு நேர் எதிரில் பத்ரகாளி அம்மன் சன்னிதி இடம்பெற்றுள்ளது. 

இங்குள்ள ஈசனை மக்கள் மிளகீசன் என்றும் அழைக்கின்றனர். கல்வெட்டில் இவ்விறைவன் ஆளுடைய பிள்ளை என்று குறிக்கப்படுகிறார்.

பஞ்சலிங்க கோவில் :

நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் என பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில் பஞ்சலிங்கங்கள் இந்தக் கோவிலில் அமைந்துள்ளன. மூலவராக #அக்னி லிங்கம் மீதம் மூன்று லிங்கங்கள் கோவிலை சுற்றிலும் அமைந்துள்ளன. சிவனுக்கு பிடித்த வில்வமரத்தின் கீழ் ஐந்தாவதாக ஆகாச லிங்கம் அமைந்துள்ளது.

தல வரலாறு :

முன்னொரு காலத்தில் வியாபாரி ஒருவர் இந்த ஆலயத்தின் வழியாக மிளகு மூட்டைகளை மாடுகள் மீது ஏற்றிச் சென்றார். எதிரெ வந்த ஒருவர் மூட்டையில் என்ன இருக்கிறது? என்று கேட்டார். 

மிளகுக்கு விலைமதிப்பு அதிகமாக இருந்த காரணத்தால் வியாபாரி பாசிப்பயிறு இருப்பதாக பொய்யுரைத்தார். பிறகு அங்கிருந்து சந்தைக்குச் சென்று மூட்டைகளைத் திறந்து பார்த்தபோது அதில் பாசிப்பயிறு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

பிறகு அந்த வியாபாரி ஆலயத்தின் முன்பாக பொய்யுரைத்ததற்கு இறைவன் அளித்த தண்டனையை எண்ணினார். அந்த வியாபாரி இறைவனை மனமுருக வேண்டி கதறி அழுதார். 

அப்போது அவருக்கு ஒரு அசரீரி ஒலி கேட்டது. உன் மாடுகள் எங்கு வந்து நிற்கிறதோ அங்கு வந்து என்னை வணங்கு. உன் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்றது குரல். வியாபாரியும் மாட்டை ஓட்டி வந்து மாடு நின்ற இடத்தில் சுக்ரீஸ்வரரை வணங்கினார். பிறகு பாசிப்பயிராக இருந்த மூட்டைகள் மிளகு மூட்டைகளாக மாறின.

இரண்டு நந்தி :

கோவில் நந்தி அருகிலுள்ள விவசாய நிலத்துக்கு சென்று மேய்ந்தது. அதைப் பார்த்து ஆத்திரமடைந்த விவசாயி தான் வைத்திருந்த கத்தியை எடுத்து நந்தியின் காதையும் கொம்பையும் வெட்டினான்.

மறுநாள் கோவிலுக்கு வந்து பார்த்தபோது கற்சிலையான நந்தியின் காதில் இருந்து ரத்தம் வழிந்துள்ளது. அதிர்ச்சியடைந்த விவசாயி தனது தோட்டத்துக்கு வந்தது நந்தி என்பதை அறிந்து இறைவனை மனமுருக வேண்டி மன்னிப்பு கேட்டார். 

பிறகு தான் செய்த தவறுக்கு பிராயச்சித்தமாக மற்றொரு நந்தி சிலை செய்து அதனை ஆலயத்தில் பிரதிஷ்டை செய்தான். பழைய நந்தியை அகற்ற எவ்வளவு முயற்சித்தும் முடியாமல் போனது. 

மறுநாள் கோவிலில் வந்து பார்த்தபோது பழைய நந்தி முன்பும் புதிய நந்தி பின்னாலும் இரண்டு நந்திகள் மாறி இருந்தது. பிரதோஷ காலங்களில் இரண்டு நந்தி சிலைக்கும் பூஜை நடத்தப்படுகிறது.

விஷேஷம் :

ஆருத்ரா தரிசனம் மகாசிவராத்திரி மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

Share this:

Write a Reply or Comment

3 + 10 =